செய்திகள்
கைது

மதுரையில் வீடு புகுந்து திருடிய 2 வாலிபர்கள் கைது

Published On 2021-10-18 11:24 GMT   |   Update On 2021-10-18 11:24 GMT
மதுரையில் வீடு புகுந்து திருடியது தொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
மதுரை:

மதுரை மாநகரில் வழிப்பறி சம்பவங்கள் தொடர் கதையாக நடந்து வந்தன. எனவே கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய மாநகர போலீஸ் கமி‌ஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டார்.

மாநகர குற்றப்பிரிவு போலீஸ் துணை கமி‌ஷனர் ராஜசேகர் உத்தரவின் பேரில், தல்லாகுளம் உதவி கமி‌ஷனர் ரவி மேற்பார்வையில், அண்ணா நகர் இன்ஸ்பெக்டர் பால முருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இவர்கள் நள்ளிரவில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான தனிப்படையினர் இன்று அதிகாலை மதிச்சியம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருட்டில் பதுங்கி இருந்த 3 பேர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர்.

போலீசார் அவர்களை விரட்டி பிடிக்க முயற்சி செய்தனர். அவர்களில் ஒருவன் தப்பி ஓடிவிட்டான். 2 பேரை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள் நரிமேடு சாலைமுதலியார் தெரு ரவி மகன் ராஜ்குமார் (வயது 20), செல்லூர் அகிம்சாபுரம் ஆறுமுகம் மகன் பிரேம்குமார் (20) என்பது தெரியவந்தது.

விசாரணையில் அவர்கள் மதிச்சியம் நடுத்தெருவை சேர்ந்த ரஞ்சித் (27) என்பவரின் வீட்டில் கொள்ளையடித்து செல்போன், வாட்ச் மற்றும் நகைகளுடன் தப்பி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் உடனடியாக ரஞ்சித் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இதில் அவர் மதுரை பைபர் கேபிள் நிறுவனம் ஒன்றில் துணை மேலாளராக வேலை பார்ப்பது தெரியவந்தது.

ரஞ்சித் நேற்று இரவு காற்றுக்காக வீட்டை திறந்து வைத்து குடும்பத்தினருடன் படுத்து தூங்கியுள்ளார். அப்போது கொள்ளையர்கள் நைசாக வீட்டுக்குள் புகுந்து 2 செல்போன்கள், விலை உயர்ந்த வாட்ச், கவரிங் தங்கச்சங்கிலி உள்பட 36 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்தது விசாரணையில் தெரிய வந்தது.

2 கொள்ளையர்களை கைது செய்த போலீசார், தப்பி ஓடி தலைமறைவான முக்கிய குற்றவாளி சவுந்தர பாண்டி (22) என்பவனை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News