செய்திகள்
கோப்பு படம்

புதுவையில் 7 மாதத்தில் 1,352 பேர் டெங்குவால் பாதிப்பு - சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்

Published On 2019-12-04 11:56 GMT   |   Update On 2019-12-04 11:56 GMT
புதுவையில் கடந்த 7 மாதத்தில் 1,352 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:

புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

வடகிழக்கு பருவமழை காலத்தில் கொசுக்களின் உற்பத்தி அதிகரிப்பது வழக்கம். கொசுக்களால் பரவும் நோய்களும் வேகமாக பரவ வாய்ப்புள்ளது.

கடந்த ஜூன் மாதம் முதல் டிசம்பர் வரை ஆயிரத்து 352 பேர் டெங்குவாலும், 500 பேர் சிக்கன்குனியாவாலும் பாதிக்கப்பட்டு உள்ளனர். டெங்கு பாதித்தவர்களில் ஒருவர் மட்டும் உயிரிழந்துள்ளார்.

சிக்கன் குனியாவால் உயிரிழப்பு ஏற்படவில்லை. கடந்த ஆண்டு 580 பேர் டெங்குவாலும், 620 பேர் சிக்கன்குனியாவாலும் பாதிக்கப்பட்டனர். மலேரியாவை பொறுத்தவரை புதுவையில் பெரிய பாதிப்பில்லை.

நோய் பரப்பும் கொசுக்களை கண்டறிய சுகாதாரத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் நாள்தோறும் களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கொசுக்களால் உற்பத்தியாகும் இடங்களை அடையாளம் கண்டு அழித்து வருகின்றனர்.

இந்த பணிகளை கலெக்டர் நேரடியாக மேற்பார்வையிடுகிறார். பொதுமக்களின் ஒத்துழைப்பின்றி கொசுக்களை ஒழிப்பது கடினம். எனவே பொதுமக்கள் வீடுகளையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News