செய்திகள்
அமைச்சர் கடம்பூர் ராஜூ

தமிழகத்தில் அதிமுகதான் ஆட்சிக்கு வரும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு

Published On 2020-10-17 11:21 GMT   |   Update On 2020-10-17 11:21 GMT
மு.க.ஸ்டாலின் கத்துக்குட்டி, அ.தி.மு.கவைத் தவிர ‌வேறு யாருக்கும் ஆட்சி அமைக்க ‌அருகதை இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பயணியர் விடுதி முன்பு அ.தி.மு.க 49வது தொடக்க விழா நடைபெற்றது. இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு எம்.ஜீ.ஆர், ஜெயலலிதா திருவுருவ படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்தார். மேலும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

அப்போது பேசிய அவர், ‘அதிமுக ஆரம்பித்து 6 மாதக் குழந்தையாக இருந்தபோதே திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் அபார வெற்றி பெற்ற வரலாறு உண்டு. 2016 தேர்தலில் தன்னந்தனியாக 234 தொகுதியில் ஒரே சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற இயக்கம் அதிமுக. இன்று அதிமுகவிற்கு 49வது பிறந்தநாள் என்றால் எழுச்சியாக உள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் அதிமுகவிற்கு வயது கூட கூட இளமை ஆகிக் கொண்டிருக்கிறது. 49வது ஆண்டில் அதிமுக ஆட்சி உள்ளது.

அடுத்த ஆண்டு அதிமுக பொன்விழா ஆண்டிலும் அதிமுக ஆட்சி தான். தேர்தலை சந்திக்க மக்கள் நம்மைவிட ஆர்வமாக உள்ளனர். அதிமுக ஆட்சி தான் வர வேண்டும் என்ற மன நிலைமையில் வாக்காளர்கள் உள்ளனர். பொன்விழா ஆண்டிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி தான் இருக்க வேண்டும் என்ற லட்சிய சபதம் ஏற்க வேண்டும். 2021ல் மட்டுமல்ல 2071லும் அதிமுக ஆட்சி தான் இருக்கும். தமிழகத்தில் அதிமுகவை தவிர ‌ வேறு யாருக்கும் ஆட்சி அமைக்க ‌அருகதை இல்லை.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியுடன் 10 தேர்தலை சந்தித்து 7ல் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தான் கட்சி வந்துள்ளது. மு.க.ஸ்டாலின் கத்துக்குட்டி தற்போது தான் தேர்தலை சந்திக்க வருகிறார். ஆகையால் திமுக பற்றி அதிமுகவினர் கவலைப்பட வேண்டாம். அதிமுகவை வெல்ல எந்த சக்தியும் இல்லை என்று சபதம் ஏற்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.
Tags:    

Similar News