செய்திகள்
திருப்பூர் அருகே இன்று நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார் - டிரைவர் உயிர் தப்பினார்
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் பற்றிய தீயை அணைத்தனர்.
திருப்பூர்:
ஈரோடு மாவட்டம் நம்பியூரை சேர்ந்தவர் குமார் (வயது 37). இவர் இன்று காலை திருப்பூர் மேட்டுப்பாளையம் பி.என்.ரோட்டில் உள்ள பனியன் நிறுவனத்தில் துணிகளை தைக்க ஆர்டர் கொடுத்து விட்டு காரில் நம்பியூருக்கு புறப்பட்டார்.
திருப்பூர் கூத்தம்பாளையம் பிரிவு அருகே செல்லும் போது போது திடீரென காரில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனால் அதிர்ச்சியடைந்த குமார் சாலையோரம் நிறுத்தி விட்டு காரில் இருந்து இறங்கி தப்பினார்.
பின்னர் சிறிது நேரத்தில் கார் மளமளவென தீப்பிடித்து எரிந்தது. காரில் சிலிண்டர் பொருத்தப்பட்டிருந்ததால் அப்பகுதி பொதுமக்கள் அங்கிருந்து அலறியடித்து ஓடினர்.
மேலும் இதுகுறித்து திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் பற்றிய தீயை அணைத்தனர்.
இருப்பினும் கார் முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது. காரில் தீப்பிடித்தது எப்படி என்று தெரியவில்லை. இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.