செய்திகள்
சென்னை மாநகராட்சி ஆணையரிடம் திட்ட அறிக்கையை வழங்கிய நிர்வாகிகள்

அனைவருக்கும் இலவச ஆக்சிஜன் திட்டம்... தன்னார்வ குழுவினருக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் பாராட்டு

Published On 2021-06-11 16:09 GMT   |   Update On 2021-06-11 16:09 GMT
அனைவருக்கும் இலவச ஆக்சிஜன் திட்டம் தொடர்பான அறிக்கையை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியிடம் வழங்கினர்.
சென்னை:

கொரோனா வைரசின் இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தபோது நாடு முழுவதும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருத்துவ ஆக்சிஜனுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியது. அந்த சமயத்தில் பல்வேறு தன்னார்வ அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் முன்வந்து ஆக்சிஜன் சப்ளைக்கு உதவி செய்தன. இதன்மூலம் ஏராளமான நோயாளிகள் பயனடைந்தனர்.

அவ்வகையில், ஆக்சிஜன் கிடைக்காமல் அவதிப்படும் நோயாளிகளுக்கு உதவ, தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து அனைவருக்கும் இலவச ஆக்சிஜன் (O2 FREE AIR FOR ALL) என்ற திட்டத்தை தொடங்கி வெற்றிகரமாக செயல்படுத்தி உள்ளனர். 

அதாவது, ஆக்சிஜன் கிடைக்காமல் தவிக்கும் நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்களை வழங்கி உள்ளனர். 7 நாட்களுக்கு வாடகையின்றி இலவசமாக அதனை பயன்படுத்திய பயன்படுத்தியபின்னர், அந்த செறிவூட்டிகளை திரும்ப பெற்றுள்ளனர். இதேபோல் மே, ஜூன் மாதங்களில் சுழற்சி முறையில் சென்னை முழுவதும் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கி 500க்கும் மேற்பட்ட உயிர்களை காப்பாற்றி உள்ளனர். இந்த உயிர்காக்கும் பணியில் 40 தன்னார்வலர்கள் பணியாற்றி உள்ளனர். 

இதுதவிர படப்பை சாயி மருத்துவமனையில், நிமிடத்திற்கு 50 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஆலையை நிறுவி நன்கொடையாக வழங்கி உள்ளனர். இதேபோல் நிமிடத்திற்கு 283 லிட்டர் 
ஆக்சிஜன்
 உற்பத்தி செய்யும் ஆலையை அமைக்கும் பணி நடைபெறுகிறது.

தொற்றுநோய் காலத்தில் அனைவருக்கும் இலவச ஆக்சிஜன் வழங்கும் இந்த திட்டப் பணிகளுக்காக, உலகம் முழுவதும் இருந்து நன்கொடையாளர்களிடம் இருந்து 1.35 கோடி ரூபாய் நன்கொடை பெற்று செலவு செய்யப்பட்டுள்ளது.

மற்றவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் இந்த திட்டத்தின் நிறைவு அறிக்கையை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியிடம், அனைவருக்கும் இலவச ஆக்சிஜன் திட்ட நிறுவனர் வரீந்தர் சிங் பாபி, நிர்வாகிகள் மஞ்சித் சிங் சாஹ்னே, சாலமோன் விக்டர் ஆகியோர் வழங்கினர். அவர்களின் அர்ப்பணிப்புமிக்க பணியை மாநகராட்சி ஆணையர் பாராட்டினார். 

மேலும் பணியில் இருந்து விடைபெறும் மாநகராட்சி துணை ஆணையர் (சுகாதாரம்) அல்பி ஜான், மற்றும் புதிதாக பொறுப்பேற்கும் துணை ஆணையர் மனிஷ் ஜி ஆகியோரிடமும் இந்த திட்ட அறிக்கை வழங்கப்பட்டது. 
Tags:    

Similar News