செய்திகள்
பசுமைமிகு புதுச்சேரியாக மாற்ற 75 ஆயிரம் மரக்கன்றுகள் நட இலக்கு- கவர்னர் தமிழிசை தகவல்
புதுச்சேரி முழுவதும் 75 ஆயிரம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
புதுச்சேரி:
நாடு முழுவதும் 75-வது ஆண்டு சுதந்திர தின பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பசுமைமிகு புதுச்சேரியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பான ஆய்வு கூட்டம் நேற்று காலை கவர்னர் மாளிகையில் நடந்தது.
கூட்டத்திற்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கி பேசியதாவது:-
புதுச்சேரி முழுவதும் 75 ஆயிரம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து உள்ளாட்சி அமைப்புகளில் அமைந்துள்ள 109 பூங்காக்களிலும் பயன்தரக்கூடிய மரங்களை நட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர கிராமப்புறங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உதவியுடன் பயன் தரும் பழவகை மரக்கன்றுகள் நட வேண்டும்.
சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பொது இடங்களில் அழகான வண்ண தோட்டங்கள் அமைக்க வேண்டும். சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் இருக்கும் மக்கள் வீட்டுக்கு ஒரு மரம் நட்டு பசுமை புதுச்சேரி திட்டத்திற்கு உதவ வேண்டும்’.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் கவர்னரின் ஆலோசகர்கள் சந்திரமவுலி, ஆனந்த பிரகாஷ் மகேஸ்வரி, கவர்னரின் சிறப்பு செயலாளர் சுந்தரேசன், தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் மற்றும் அரசுத்துறை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.