செய்திகள்

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் சிறந்த பந்துவீச்சு: சாய் கிஷோர் சாதனை

Published On 2017-08-05 05:18 GMT   |   Update On 2017-08-05 05:18 GMT
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி காரைக்குடி காளையை சுருட்டி 3-வது வெற்றியை பெற்றது. சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் காரைக்குடி காளை அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கில்லீசின் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர் 13 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார். டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் ஒரு பவுலரின் சிறந்த பந்து வீச்சு இது தான். இதற்கு முன்பு கடந்த ஆண்டு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் அஷ்வாத் முகுந்தன் (திருவள்ளூருக்கு எதிராக) 17 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளும், தூத்துக்குடி அணியின் எல்.பாலாஜி 18 ரன்னுக்கு 5 விக்கெட்டும் (திருவள்ளூருக்கு எதிராக) எடுத்ததே சிறந்த பந்து வீச்சு வரிசையில் இடம் பெற்றிருந்தது.

ஆட்டநாயகன் விருதை பெற்ற 20 வயதான சாய் கிஷோர் கூறும் போது, ‘எனக்கு பக்கபலமாக இருக்கும் எனது குடும்பத்தினருக்கு இந்த விருதை சமர்ப்பிக்க விரும்புகிறேன். விளையாட்டு ஆர்வத்தை எனது தந்தை ஊக்கமளிக்காமல் இருந்திருந்தால் நான் என்ஜினீயர் ஆகியிருப்பேன். அணிக்காக எனது பணியை திறம்பட செய்வதில் கவனம் செலுத்துகிறேன்.’ என்றார். 
Tags:    

Similar News