கொடைக்கானல் அருகே தனியார் தோட்ட காவலாளி குத்திக்கொலை
பெரும்பாறை:
கொடைக்கானல் தாலுகா பெரியூர் ஊராட்சி மண்டக்கால்வாய் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 45). இவர் பெரும்பாறை அருகே உள்ள குத்துக்காடு பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
அதன் அருகே உள்ள மற்றொரு தோட்டத்தில் சக்தி (40) என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு இவர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றியதில் சக்தி தோட்டத்தில் இருந்து கத்தியை எடுத்து செந்தில் குமாரின் உடலில் பல இடங்களில் குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே செந்தில்குமார் உயிரிழந்தார்.
இதை பார்த்ததும் சக்தி அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இன்று அதிகாலை தோட்டத்துக்கு வந்த தொழிலாளர்கள் செந்தில்குமார் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து தாண்டிக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தப்பி ஓடிய சக்தியை தேடி வருகின்றனர். குடிபோதையில் இந்த கொலை நடந்ததா? அல்லது கொடுக்கல் வாங்கல் பிரச்சினையா? அல்லது பெண் தகராறில் கொலை நடந்ததா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.