செய்திகள்
நிவர் புயலால் கடலூரில் கடும் பாதிப்பு- நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் முதலமைச்சர்
கடலூரில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடலூர்:
நிவர் புயலின் தாக்கத்தினால் கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. வீடுகளின் கூரைகள் பெயர்ந்து காற்றில் அடித்துச் செல்லப்பட்டன.
சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணியிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதிலும் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மதியம் கடலூர் புறப்பட்டுச் சென்றார். முதலில் ரெட்டிச்சாவடி பகுதியில் புயல் பாதிப்பை ஆய்வு செய்தார்.
புயலால் பாதிக்கப்பட்ட வாழைத் தோப்புகளை பார்வையிட்ட முதலமைச்சரிடம், வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, பாதிப்பு குறித்த விவரங்களை தெரிவித்தார். அதன்பின்னர் புயல், மழையால் பாதிக்கப்பட்ட மற்ற பகுதிகளுக்கும் முதலமைச்சர் சென்றார்.