செய்திகள்
அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் அதிரடி ஆய்வு
மருத்துவமனை வளாகத்தில் ஒரு நிமிடத்திற்கு 500 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஆக்சிஜன் செறிவூட்டி மைய கட்டுமானப்பணிகளை ஆய்வு செய்து விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
குடிமங்கலம்:
உடுமலை அரசு மருத்துவமனையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவ சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் கேட்டதோடு உள்நோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் உணவு, மருத்துவம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும் மருத்துவமனை வளாகத்தில் ஒரு நிமிடத்திற்கு 500 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஆக்சிஜன் செறிவூட்டி மைய கட்டுமானப்பணிகளை ஆய்வு செய்து விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து குடிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள் மற்றும் வெளிநோயாளிகளிடம் குறைகளை கேட்டதோடு சுகாதாரத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் நலத்திட்ட உதவிகள் நிலை குறித்து ஆய்வு செய்தார்.
பல்லடம் தாலுகா அலுவலகத்தில் பல்லடம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது இதற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் அதனை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் தாலுகா அலுவலக நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது பல்லடம் தாசில்தார் தேவராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.