செய்திகள்
பட்டாசு கடை

தீபாவளி பட்டாசு கடைகளுக்கு 30 கட்டுப்பாடுகள் அவசியம்

Published On 2021-10-18 10:03 GMT   |   Update On 2021-10-18 11:20 GMT
பட்டாசு கடையில் குறைந்தபட்சம் 2 தீயணைப்பு கருவிகள், 2 வாளிகளில் தண்ணீர், மணல் ஆகியவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும்.
சென்னை:

தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் 4-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.

பண்டிகையை கொண்டாட மக்கள் தயாராகி வருகிறார்கள். கொரோனா தொற்று பரவலும் குறைந்து வருவதால் முழுமையான தளர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு இன்னும் 2 வார காலமே இருப்பதால் பட்டாசு கடைகள் வைப்பதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. பட்டாசு கடைகளை திறப்பதற்கு வியாபாரிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதேநேரத்தில் பட்டாசு கடைகளில் விபத்துகள் ஏற்படாமல் இருப்பதற்கு பல்வேறு விதிமுறைகளை வழக்கம் போல தீயணைப்புத்துறை விதித்துள்ளது.



தீயணைப்புத்துறையின் தடையில்லா சான்றிதழ் பெற்றால்தான் அந்தந்த மாநகர காவல்துறை அல்லது வருவாய்துறையிடம் இருந்து பட்டாசு கடை திறப்பதற்குரிய உரிமம் பெற முடியும். பட்டாசு கடைகளை ஒழுங்குப்படுத்துவதற்காக தீயணைப்புத்துறை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து தமிழகம் முழுவதும் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

அதில் பட்டாசு கடைகள் வைப்பதற்கு பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள் ஆகியவற்றை நேரடியாக ஆய்வு செய்த பின்னர் தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பட்டாசு கடைகள் வைக்க 30 விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவற்றை பின்பற்றினால் மட்டுமே தடையில்லா சான்று வழங்க வேண்டும் என்று தீயணைப்புத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

ஒரு பட்டாசு கடைக்கும், மற்றொரு கடைக்கும் குறைந்தபட்சம் 3 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். உதிரி பட்டாசுகளை கடைகளில் விற்பனை செய்யக்கூடாது. ‘‘இங்கு புகை பிடிக்கக்கூடாது’’ உள்ளிட்ட எச்சரிக்கை விளம்பர பலகைகளை பட்டாசு கடை முன்பு வைத்திருக்க வேண்டும்.

அலங்கார மின்விளக்குகளை தொங்க விடக்கூடாது. வாடிக்கையாளர்களுக்கு பட்டாசு மற்றும் துப்பாக்கி வெடித்துக் காட்டக் கூடாது. கடைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகளவில் சேர அனுமதிக்கக் கூடாது.

உரிமம் பெற்ற கட்டிடத்தை தவிர வேறு இடங்களில் பட்டாசு இருப்பு வைக்கக்கூடாது. அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் பட்டாசு இருப்பு வைக்கவும் கூடாது.

இதை மீறும் பட்டாசு விற்பனையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். பட்டாசு கடையின் அருகே தீயணைப்புத்துறை வாகனம் வரும் அளவுக்கு வழி இருக்க வேண்டும்.

பட்டாசு கடையில் குறைந்தபட்சம் 2 தீயணைப்பு கருவிகள், 2 வாளிகளில் தண்ணீர், மணல் ஆகியவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும். கடை உரிமத்தை தணிக்கையின்போது அலுவலர்களின் பார்வைக்கு தெரியும்படி வைத்திருக்க வேண்டும்.

இருப்பு, தணிக்கை பதிவேடு முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்பது உள்பட 30 விதிமுறைகளை பின்பற்றினாலேயே தீயணைப்புத் துறையின் தடையில்லா சான்றிதழ் வழங்கப்படும் என பட்டாசு வியாபாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வெடிபொருட்கள் சட்டப்படி பட்டாசு கடை வைக்கும் இடம் கல் மற்றும் கான்கிரீட் கட்டிடமாக இருக்க வேண்டும். கடைக்கு இரு புறமும் வழி கட்டாயம் இருக்க வேண்டும். கட்டிடத்தில் மின் விளக்குகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். எண்ணெய் விளக்குகளை பயன்படுத்தக்கூடாது. தற்காலிக பட்டாசு கடை விற்பனை உரிமம் கேட்பவர்கள் தீயணைப்புத் துறை, உள்ளாட்சி நிர்வாகம், காவல்துறை ஆகியவற்றிடம் இருந்து தடையில்லா சான்று கட்டாயம் பெற வேண்டும்.

பட்டாசு கடைகளில் வேறு பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. தரைத்தளத்தில் மட்டும் பட்டாசுகளை வைத்திருக்க வேண்டும். படிக்கட்டுகள், லிப்ட் ஆகியவற்றின் அருகே பட்டாசுகளை வைத்திருக்கக் கூடாது.

இதேபோல அடுக்குமாடி குடியிருப்பு, திருமண மண்டபம், அரங்குகள் ஆகியவற்றில் பட்டாசுகளை விற்கக் கூடாது என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.


Tags:    

Similar News