செய்திகள்
திருவெறும்பூர் அருகே வீட்டின் ஓட்டை பிரித்து கொள்ளை
திருவெறும்பூர் அருகே பட்டபகலில் வீட்டின் ஓட்டை பிரித்து மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவெறும்பூர்:
திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே உள்ள தொண்டமான்பட்டி ரெயில் நிலையம் அருகே வசிப்பவர் விஜயலட்சுமி (வயது50). இவர் கூத்தைப்பாரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் தனது வீட்டிற்கு திரும்பிய விஜயலட்சுமி வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றுள்ளார். அப்போது வீட்டிற்குள் மேலே இருந்து வெளிச்சம் வந்துள்ளது.
என்னவென்று பார்த்த போது வீட்டின் ஓடு பிரிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே வீட்டிலிருந்த பீரோவை பார்த்போது அதிலிருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரம் பணம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.
இது குறித்து விஜயலட்சுமி திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
பட்டபகலில் வீட்டின் ஓட்டை பிரித்து கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.