செய்திகள்
முக ஸ்டாலின்

எதிர்க்கட்சியே இல்லை என்ற இறுமாப்பு எனக்கு கிடையாது- மு.க.ஸ்டாலின் கடிதத்தில் தகவல்

Published On 2021-10-15 05:12 GMT   |   Update On 2021-10-15 05:12 GMT
மக்களின் குறைகள் தீர்க்கப்பட வேண்டுமேயன்றி, நிர்வாகத்தின் மீது குறை சொல்லக்கூடிய நிலை உருவாகவே கூடாது என்று மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி உள்ளார்.
சென்னை:

மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

உள்ளாட்சி நிர்வாகத்தை ஊழல் நிர்வாகமாகச் சீரழித்த முந்தைய ஆட்சியாளர்கள் நம் மீது சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகளை மக்கள் புறங்கையால் தள்ளி, தி.மு.கழகத்திற்கு கிட்டத்தட்ட 100 விழுக்காடு வெற்றியைத் தந்திருக்கிறார்கள். ஓர் எதிர்க்கட்சிக்குரிய குறைந்தபட்ச அளவிலான வெற்றியைக் கூட அவர்களுக்குத் தருவதற்கு மக்கள் முன்வரவில்லை - மனமிரங்கவில்லை. எதிர்க்கட்சி என்பது ஜனநாயகம் எனும் நாணயத்தின் மற்றொரு பக்கம். ஜனநாயகத்தின் சிறப்பம்சம்.

எதிர்க்கட்சியே இல்லாத ஆளுங்கட்சி என்று ஒருபோதும் இறுமாப்பு கொள்ளும் மனப்பான்மை உங்களில் ஒருவனான எனக்குக் கிடையாது. நம்மை ஆளாக்கிய உயிர்நிகர் தலைவர் கலைஞர் ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் எப்படி செயல்படவேண்டும் என்ற அரிய அரசியல் பயிற்சியை வழங்கியிருக்கிறார். தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்களைக் கொண்ட வலிமையான எதிர்க்கட்சியின் தலைவர் என்ற பொறுப்பை உங்களின் ஒருவனான நான் ஏற்கனவே வகித்திருக்கிறேன்.

மக்கள் பணியில் ஈடுபடும்போது நமது மனசாட்சியே நமக்கு எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும். தோழமைக் கட்சிகளின் கோரிக்கைகள் -வலியுறுத்தல்கள், ஊடகங்களின் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், சமூக வலைதளங்களில் சாதாரண மனிதர்களின் தெளிவான பார்வைகள் பதிவுகள் ஆகியவையும் கூட எதிர்க்கட்சியின் பணிதான். அத்தகைய கருத்துகளை மனதில் கொண்டு, மக்கள் பணி எனும் மகேசன் பணியை நமது அரசு தொடர்ந்து மேற்கொள்ளும்.

உள்ளாட்சி அமைப்புகளே ஜனநாயகத்தின் அடித்தளம் -ஆணிவேர். அவை வலிமையாக இருக்க வேண்டும் என்பதை தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் கவனத்தில் கொண்டு செயலாற்றியிருக்கிறது. 1996-ல் கலைஞர் தலைமையிலான கழக ஆட்சியில், பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீட்டுடன் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்றன. 2006-ல் தலைவர் கலைஞர் தலைமையிலான அமைச்சரவையில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த உங்களில் ஒருவனான நான், ஊராட்சித் தேர்தல் நடைபெற முடியாமல் இருந்த பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டகச்சியேந்தல் ஆகிய ஊராட்சிகளுக்கான தேர்தலை நடத்தும் பொறுப்பை ஏற்று, வெற்றிகரமாகச் செயல்படுத்தினேன்.

அண்மையில், அக்டோபர் 2 அன்று கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டபோது, அந்த பாப்பாப்பட்டி ஊராட்சிக்கு முதலமைச்சர் என்ற முறையில் சென்று, அந்த மக்களுடன் இணைந்து கிராமசபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து, நிறைவேற்றினேன்.

தி.மு.க. சார்பில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற அனைவரும், மக்களின் நியாயமான கோரிக்கைகைளையும் அவர்களின் அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற்றக்கூடிய மக்கள் பிரதிநிதிகளாக மக்கள் சேவகர்களாக எந்நாளும் உழைத்திட ஊழியம் புரிந்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னையின் முதல் மேயர் என்ற பெருமையை 1996-ல் நடந்த மாநகராட்சித் தேர்தலில் சென்னைவாழ் மக்கள் எனக்கு வழங்கியபோது, கலைஞர் சொன்னது இன்றுவரை என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. “இது பதவியல்ல.. பொறுப்பு” என்பதுதான் நம் உயிர்நிகர் தலைவர் சொன்ன வைர வரிகள். அதனை நெஞ்சில் பதிய வைத்து, தொடர்ந்து உழைத்து வரும் உங்களில் ஒருவனான நான், இன்று முதல்-அமைச்சர் என்பதை பதவியாகக் கருதாமல் பொறுப்பு என்றே கருதுகிறேன்.

உள்ளாட்சி அமைப்புகளில் உங்களுக்குக் கிடைத்துள்ள பொறுப்புகளை உணர்ந்து ஊக்கத்துடன் மக்கள் பணியாற்றுங்கள். மே 7-ம் நாள் பொறுப்பேற்ற கழக அரசு, மக்கள் நலன் காப்பதில் இந்தியாவிலேயே முதன்மையாகக் திகழ்கிறது என்று இந்திய ஊடகங்கள் அனைத்தும் பாராட்டுகின்றன.

அந்தப் பாராட்டுப் பத்திரங்கள், பத்திரமாக நிலைத்திடும் வகையில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க.வினர் பொறுப்புடன் செயலாற்ற வேண்டும். தூய்மையான -வெளிப்படையான நிர்வாகத்தினை வழங்கிட வேண்டும்.

மக்களின் குறைகள் தீர்க்கப்பட வேண்டுமேயன்றி, நிர்வாகத்தின் மீது குறை சொல்லக்கூடிய நிலை உருவாகவே கூடாது. ஜனநாயகத்தில் மக்கள்தான் நமக்கு எஜமானர்கள். நாம் அவர்களுக்குத் தொண்டு செய்ய வேண்டியவர்கள் என்பதை எந்நாளும் எப்பொழுதும் நெஞ்சில் கொண்டு செயலாற்றிட வாழ்த்துகிறேன்.

9 மாவட்ட ஊரக உள்ளாட்சிக் களத்தில் உதித்தெழுந்த ஜனநாயக சூரியன், விரைவில் நடைபெறவிருக்கும் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் களத்திலும் உதித்திட வேண்டும். மக்கள் நம் பக்கம்; நாம் மக்களின் பக்கம். அதற்கேற்ப நமது செயல்பாடுகள், மக்கள் நலன் காக்கும் வகையில் தொடர்ந்திடும். இனி உள்ளாட்சி எங்கும் நல்லாட்சி ஒளிரும்!

இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News