ஆன்மிகம்
திருச்செந்தூர் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மற்றகால பூஜைகள் நடைபெற்றது. அதிகாலை முதலே கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல், ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் பாத யாத்திரையாக கோவிலுக்கு வந்தனர். பெரும்பாலான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் கோவிலுக்கு வந்து வழிபட்டனர். சில பெண்கள் கோவில் கிரிப்பிரகாரத்தை சுற்றிலும் அடிபிரதட்சணம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து, கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களை அனுமதித்தனர். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, கடந்த 2 நாட்களாக கோவில் கடற்கரைக்கு செல்லவோ, கடலில் புனித நீராடவோ பக்தர்களை அனுமதிக்கவில்லை. கோவில் கடற்கரை பகுதியில் போலீசார் இரும்பு தடுப்புகளை அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் கடற்கரை வெறிச்சோடியது.