ஆன்மிகம்
சக்கரத்தாழ்வார்

கிரக தோஷத்தில் இருந்து விடுபட சக்கரத்தாழ்வாரை விரதம் இருந்து வழிபடலாம்

Published On 2020-11-10 05:34 GMT   |   Update On 2020-11-10 05:34 GMT
புதன், சனிக்கிழமைகளில் விரதம் இருந்து சக்கரத்தாழ்வாருக்கு துளசி மாலை சார்த்தி, 12 அல்லது 24 அல்லது 48 முறை வலம் வந்து வழிபட்டால் பிரார்த்தனைகள், வேண்டுதல்கள் நிறைவேறும்.
விஷ்ணுவின் பஞ்ச ஆயுதங்களில் முதன்மையான சக்கரத்தை திருவாழியாழ்வான் எனும் சக்கரத்தாழ்வான் என்று வைணவ நூல்கள் தெரிவிக்கின்றன. பெருமாள் கோயில்களில் எட்டு கரங்கள் கொண்ட சுதர்சனரையும், 16 கரங்கள் கொண்ட மூர்த்தியையும், 32 கரங்கள் கொண்ட மகா சுதர்சனரையும் காணலாம்.

சுதர்சனர் தனது 16 திருக்கரங்களில் சக்கரம், மழு, ஈட்டி, தண்டு, அங்குசம், அக்னி, கத்தி, வேல், சங்கம், வில், பாசம், கலப்பை, வஜ்ரம், கதை, உலக்கை, சூலம் என பதினாறு வகையான ஆயுதங்களுடன் மகா சுதர்சன மூர்த்தியாக காட்சி தருகிறார்.

சுதர்சனர் வழிபாடு மிகவும் சிறப்பானது, மகத்தானது என்று போற்றப்படுகிறது. அழிக்க முடியாத பகையை அழித்து, நீக்க முடியாத பயத்தை நீக்க வல்லவர் சுதர்சன மூர்த்தி. மனிதனுக்கு பெரும்பாலான பாதிப்புகளுக்கு மூலகாரணமாக இருப்பவை ருணம், ரோகம், சத்ரு எனப்படும் கடன், வியாதி, எதிரி ஆகியவைதான் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். அவற்றை அழித்து மனஉளைச்சலை போக்கி சாந்தத்தை தருகிறார் சுதர்சனர்.

கல்வி தொடர்பான தடைகளை நீக்கி சரளமான கல்வி ஞானத்தையும் யோக ஞானத்தையும் அருள்கிறார் சக்கரத்தாழ்வார். கெட்ட கனவுகள், மனசஞ்சலம், சித்த பிரமை போன்ற மனம் தொடர்பான பாதிப்புகள், தொந்தரவுகளில் இருந்தும் விடுபடச் செய்கிறார் சக்கரத்தாழ்வார்.

சக்கரத்தாழ்வாரை விரதம் இருந்து வழிபட்டால் கிரக தோஷத்தில் இருந்து விடுபடலாம். புதன், சனிக்கிழமைகளில் விரதம் இருந்து சக்கரத்தாழ்வாருக்கு துளசி மாலை சார்த்தி, 12 அல்லது 24 அல்லது 48 முறை வலம் வந்து வழிபட்டால் பிரார்த்தனைகள், வேண்டுதல்கள் நிறைவேறும்.

நம்மை சூழ்ந்திருக்கும் துன்பங்கள், தடைகள், கவலைகள், துக்கங்கள் முதலானவற்றை போக்கி அருளுகிறார் சக்கரத்தாழ்வார்!
Tags:    

Similar News