செய்திகள்
கலெக்டர் மெகராஜ்

நெல், வெங்காயம் பயிருக்கு விவசாயிகள் காப்பீடு செய்யலாம்- கலெக்டர் தகவல்

Published On 2020-11-18 08:51 GMT   |   Update On 2020-11-18 08:51 GMT
நாமக்கல் மாவட்டத்தில் நெல் மற்றும் வெங்காயம் பயிருக்கு விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ளலாம் என கலெக்டர் மெகராஜ் தெரிவித்து உள்ளார்.
நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் நெல் மற்றும் வெங்காயம் பயிருக்கு விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ளலாம் என கலெக்டர் மெகராஜ் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் சம்பா நெல் பயிர் மற்றும் வெங்காயம் பயிர் காப்பீடு செய்ய அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் சம்பா நெல் பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் புயல், வெள்ளம், வறட்சி மற்றும் பூச்சிநோய் தாக்குதல் ஆகிய இயற்கை இடர்பாடுகளில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம்.

நாமக்கல் மாவட்டத்தில் நெல் பயிருக்கு 21 பிர்க்காக்களிலும், வெங்காயம் 4 பிர்க்காக்களிலும் அறிவிக்கை செய்யப்பட்டு உள்ளது. கடன் பெறும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட வங்கிகளில், தங்களின் சுய விருப்பத்தின் பேரில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

கடன் பெறாத விவசாயிகள், பொதுச்சேவை மையங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம். இத்திட்டத்தில் சம்பா நெல் பயிருக்கு வருகிற டிசம்பர் மாதம் 15-ந் தேதிக்குள்ளும், வெங்காயம் பயிருக்கு வருகிற 30-ந் தேதிக்குள்ளும் காப்பீடு செய்து கொள்ள வேண்டும். ஒரு ஏக்கருக்கு சம்பா நெல் பயிருக்கு 494 ரூபாய் 25 காசுகளும், வெங்காயம் பயிருக்கு 1805 ரூபாய் 58 காசுகளும் பிரீமியம் செலுத்த வேண்டும்.

பயிர் காப்பீடு செய்யும் முன் முன்மொழிவு விண்ணப்பத்துடன் கிராம நிர்வாக அலுவலரின் அடங்கல், விதைப்பு சான்று, வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் இணைத்து கட்டணத்தை செலுத்த வேண்டும். இது தொடர்பான விவரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலக அலுவலர்களை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News