செய்திகள்
கோப்புபடம்

மதுரையில் தொழில் அதிபரிடம் ரூ.2.96 கோடி பறிமுதல்

Published On 2021-09-11 14:07 GMT   |   Update On 2021-09-11 14:07 GMT
மதுரையில் தொழில் அதிபரிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் ரூ.2.96 கோடி பணத்துடன் 3 பேரையும் அழைத்து சென்றனர்.

மதுரை:

மதுரை கரிமேடு சட்டம் ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவண குமார் மற்றும் போலீசார் நேற்று இரவு மேலப் பொன்னகரம் பகுதியில் ரோந்து பணிக்கு சென்றனர்.

அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்கள் வந்தன. அவற்றில் 3 பேர் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்தனர்.

அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். எனவே சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களின் உடமைகளை சோதனை செய்து பார்த்தனர்.

அப்போது அவர்களிடம் ரூ.2 கோடியே 96 லட்சம் இருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் மேற்கண்ட 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் அவர்களில் ஒருவர் தமிழ்ச்சங்கம் ரோட்டை சேர்ந்த விக்னேஸ்வரன் (வயது 32), நகைக்கடை பஜாரில் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார்.

விக்னேஸ்வரன் மேல பொன்னகரம் பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதற்காக அவர் அந்த பணத்துடன் கட்டுமானம் நடந்த பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

இருந்தபோதிலும் கைப்பற்றப்பட்ட சுமார் ரூ.2.96 கோடி பணத்திற்கு அவரிடம் ஆவணங்கள் எதுவும் இல்லை என்று தெரிகிறது. இதையடுத்து போலீசார் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து வருமானவரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து ரூ.2.96 கோடி பணத்துடன் 3 பேரையும் அழைத்து சென்றனர்.

Tags:    

Similar News