செய்திகள்
லாலாபேட்டை அருகே பாம்பு கடித்து பெண் பலி
லாலாபேட்டை அருகே பாம்பு கடித்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாலாபேட்டை:
லாலாபேட்டையை அடுத்த மேல சிந்தலவாடி அக்ரஹார வீதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி கலைவாணி (வயது 52). நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் வீட்டின் வெளியே காய்ந்து கொண்டிருந்த துணிகளை கலைவாணி எடுக்க சென்றார். அப்போது அவரை கண்ணாடி விரியன் பாம்பு கடித்தது. இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கலைவாணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து லாலாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.