செய்திகள்
74 ரன்கள் அடித்த தமிம் இக்பால்

பேட்ஸ்மேன்கள் ஆதிக்கத்தால் இலங்கை, வங்காளதேசம் இடையிலான முதல் டெஸ்ட் டிரா

Published On 2021-04-25 19:46 GMT   |   Update On 2021-04-25 19:46 GMT
பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தியதால் இலங்கை மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
பல்லேகெலே:

இலங்கை-வங்காளதேச அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பல்லகெலேயில் நடைபெற்றது.

இதில் முதலில் பேட் செய்த வங்காளதேசம் அணி 7 விக்கெட் இழப்புக்கு 541 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

நஜ்முல் ஹூசைன் ஷன்டோ 163 ரன்னிலும், மொமினுல் ஹக் 127 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 3-வது விக்கெட்டுக்கு நஜ்முல் ஹூசைன்-மொமினுல் ஹக் ஜோடி 242 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

தமிம் இக்பால் 90 ரன்னில் வெளியேறினார். லிட்டன் தாஸ் அரை சதமடித்து அவுட்டானார். முஷ்பிகுர் ரஹீம் அரை சதமடித்து 68 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இலங்கை சார்பில் விஷ்வா பெர்னாண்டோ 4 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து, இலங்கை அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் திமுத் கருணரத்னே இரட்டை சதமடித்து 244 ரன்னில் அவுட்டானார். தனஞ்செய டி சில்வா 166 ரன்னில் வெளியேறினார்.
இருவரும் இணைந்து 4வ்து விக்கெட்டுக்கு 345 ரன்கள் சேர்த்தனர். லஹிரு திரிமனே 58 ரன்னில் அவுட்டானார்.



இறுதியில், இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 648 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

வங்காளதேசம் சார்பில் தஸ்கின் அகமது 3 விக்கெட்டும், தைஜுல் இஸ்லாம் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை ஆடிய வங்காளதேசம், ஐந்தாம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 100 ரன்கள் எடுத்தது. தமிம் இக்பால் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இதன்மூலம் இலங்கை மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது.
ஆட்ட நாயகன் விருது திமுத் கருணரத்னேவுக்கு வழங்கப்பட்டது.

இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 29-ம் தேதி தொடங்குகிறது.
Tags:    

Similar News