விளையாட்டு
ஸ்ரீகாந்த், அஸ்வினி பொன்னப்பா

இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடர்: 7 இந்திய வீரர்களுக்கு கொரோனா உறுதி

Published On 2022-01-13 04:19 GMT   |   Update On 2022-01-13 04:19 GMT
இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே 3 இந்திய வீரர்கள் கொரோனா காரணமாக வெளியேறினர்.
புது டெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிவேகத்தை எட்டியுள்ள நிலையிலும்,  இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடர் நேற்று முன்தினம் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் தொடங்கியது. இந்த தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா நேவால், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் விளையாடி வருகின்றனர். 

இன்று தொடரின் 2-வது சுற்று தொடங்க இருந்த நிலையில், இந்திய வீரர்கள் கிடம்பி ஸ்ரீகாந்த் நம்மாழ்வார், அஸ்வினி பொன்னப்பா, ரித்திகா ராகுல், தெரசா ஜாலி, மிதுன் மஞ்சுநாத், சிம்ரன் அமன் சிங், குஷி குப்தா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதையடுத்து இந்த 7 வீரர்களும் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். இவர்களுக்கு எதிரான போட்டிகளில் ஆட இருந்த அனைத்து வீரர்களும் அடுத்த சுற்றுக்கு தகுதி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.



இதை தொடர்ந்து அனைத்து பங்கேற்பாளர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, பேட்மிண்டன் உலக சம்மேளனம் மற்றும் இந்திய பேட்மிண்டன் சங்கத்தின் வழிகாட்டுதல்களின்படி சோதனை நெறிமுறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே, 2019-ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் வெண்கலப் பதக்கம் வென்ற பி சாய் பிரனீத் மற்றும் இரட்டை நிபுணர்களான மனு அத்ரி மற்றும் துருவ் ராவத் ஆகியோர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாக்கி தொடரில் இருந்து வெளியேறினர்.

மேலும் தங்கள் நாட்டு வீரர்கள் 2 பேருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து முழு இங்கிலாந்து பேட்மிண்டன் அணியும் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News