உள்ளூர் செய்திகள்
கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி
சித்ரா பவுர்ணமியையொட்டி கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி - எம்.எல்.ஏ.க்கள் நயினார் நாகேந்திரன் எம்.ஆர்.காந்தி பங்கேற்பு
கன்னியாகுமரி:
சித்ரா பௌர்ணமியை யொட்டி குமரி மாவட்ட இந்து திருத்தொண்டர் பேரவை சார்பில் முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்ச்சி கன்னியாகுமரி கடற்கரையில் நேற்று மாலை நடந்தது.
இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பஜனையும் அதைத் தொடர்ந்து கன்னியாகுமரி சன்னதி தெருவில் உள்ள வேத பாடசாலையில் இருந்து கைலாய வாத்தியத்துடன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பர வாகனத்தில் நடராஜர் எழுந்தருளி கடற்கரையில் உள்ள பரசுராமரால் ஸ்தாபிக்கப்பட்ட விநாயகர் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்த நிகழ்ச்சி நடந்தது.
இதில் சுசீந்திரம் காசி திருப்பனந்தாள் திருமடத்தைச் சேர்ந்த தம்பையா ஓதுவாரின் பண்ணிசை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து முக்கடல் சங்கமத்தில் கடல்மாதாவுக்கு சங்கல்ப பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. அதன் பின்னர் சப்தகன்னிகள் பூஜை நடந்தது.
இதில் 27 சுமங்கலி பெண்கள் கையில் அகல் விளக்கு ஏந்தி கடல் அன்னைக்கு தீபம் காட்டினார்கள்.இந்த நிகழ்ச்சிக்கு வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரமதலைவர் சுவாமி சைதன்யானந்த ஜி மஹாராஜ் தலைமை தாங்கினார்.
குமரி மாவட்ட இந்து திருத்தொண்டர் பேரவை தலைவர் வக்கீல் ராஜகோபாலன், பொதுச் செயலாளர் டாக்டர் சிவசுப்பிரமணிய பிள்ளை, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அனுசியா செல்வி, பொருளாளர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரூர் திருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழிவழி பேராதீனம் குருமகா சன்னிதானம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், ஸ்ரீமத் பரசமய கோளரி நாத் ஆதீனம் திருநெல்லை தென் மண்டல பொறுப்பாளர் 39-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ புத்தாத்மானந்த சரஸ்வதி சுவாமிகள் ஆகியோர் ஆசியுரை வழங்கினார்கள்.
நெல்லைசட்டமன்ற தொகுதிபா.ஜ.க. எம்.எல்.ஏ.நயினார்நாகேந்திரன், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிபா.ஜ.க. எம்.எல்.ஏ. எம்.ஆர். காந்தி, ஆகியோர் தீபம் ஏற்றி முக்கடல் சங்கமம்மகாசமுத்திர தீர்த்த ஆரத்தியை தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதன், குமரி மாவட்ட பா.ஜ.க. பொருளாதார பிரிவு தலைவர் சி.எஸ் சுபாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி மாவட்ட இந்து திருத்தொண்டர் பேரவை தலைவர் எஸ். ராஜகோபால், பொதுச்செயலாளர் எஸ்.சிவசுப்பிரமணிய பிள்ளை, பொருளாளர் செந்தில், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அனுசுயா செல்வி, எம். சந்திரன், எம். கோபி ஆகியோர் செய்து இருந்தனர்.