ஆன்மிகம்
திருப்பரங்குன்றம் கோவிலில் இருந்து பல்லக்கில் முருகப்பெருமான் மதுரை புறப்பட்டபோது எடுத்தபடம்.

பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல்: குன்றத்து குமரன் பல்லக்கில் மதுரை சென்றார்

Published On 2019-09-09 03:29 GMT   |   Update On 2019-09-09 03:29 GMT
மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்து வரும் ஆவணி மூலத்திருவிழாவில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நிகழ்ச்சியில் பாண்டிய மன்னனாக கலந்துகொள்ள திருப்பரங்குன்றத்தில் இருந்து முருகப்பெருமான் பல்லக்கில் மதுரை சென்றார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று(திங்கட்கிழமை) பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பாண்டிய மன்னனாக திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பங்கேற்பார். அதன்படி நேற்று காலை திருப்பரங்குன்றம் கோவிலில் இருந்து தெய்வானையுடன் பாண்டிய மன்னனாக சுப்பிரமணியசுவாமி பல்லக்கில் எழுந்தருளி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு புறப்பட்டார்.

திருப்பரங்குன்றம் கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க புறப்பட்ட பாண்டிய மன்னனான முருகப்பெருமானை மதுரையில் வழி நெடுகிலும் ஏராளமான திருக்கண்கள் அமைத்து பக்தர்கள் வழிபட்டனர். ஒவ்வொரு திருக்கண்களுக்கும் சென்ற சுப்பிரமணியசுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதையடுத்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றடைந்த முருகப்பெருமான்-தெய்வானைக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்தநிலையில் இன்று மதியம் 1.30 மணிக்கு நடைபெறும் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நிகழ்ச்சியின்போது சுப்பிரமணியசுவாமி பாண்டிய மன்னனாக இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பின்னர் வருகிற 13-ந்தேதி வரை முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அதன்பின்பு அன்றைய தினம் மதியம் 4 மணிக்கு மதுரையில் இருந்து முருகப்பெருமான் புறப்பட்டு தனது இருப்பிடமான திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வந்தடைகிறார். வரும் வழி நெடுகிலுமாக 100-க்கும் மேற்பட்ட திருக்கண்களில் சாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 
Tags:    

Similar News