உள்ளூர் செய்திகள்
கன்னியாகுமரி பகவதி அம்மன்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நாளை சித்ரா பவுர்ணமி விழா

Published On 2022-04-15 07:54 GMT   |   Update On 2022-04-15 07:54 GMT
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நாளை சித்ரா பவுர்ணமி விழா நடக்கிறது.
கன்னியாகுமரி:

உலகப் புகழ் பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பவுர்ணமி அன்று சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்படுவது வழக்கம்.

அதேபோல இந்த ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி விழா நாளை (சனிக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாளை அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும் விஸ்வரூப தரிசனமும் நடக்கிறது. 

அதைத்தொடர்ந்து 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகமும் 6 மணிக்கு தீபாராதனையும் நடக்கிறது.  பின்னர் காலை 8 மணிக்கு ஸ்ரீபலி பூஜையும் நிவேத்திய பூஜையும் நடக்கிறது. அதன் பிறகு 10 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், பால், தயிர், நெய் பன்னீர், இளநீர், தேன், களபம், சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. 

அதன்பிறகு அம்மனுக்கு மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காணிக்கையாக வழங்கிய ரூ.1 கோடி மதிப்புள்ள வைரக் கிரீடம், வைரக்கல் மூக்குத்தி தங்க ஆபரணங்கள் மற்றும் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 

அதைத்தொடர்ந்து 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும் பகல்12 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நாளை மாலை 6 மணிக்கு கன்னியாகுமரி கடலில் ஒரே நேரத்தில் சூரியன் மறைவு மற்றும் சந்திரன் உதயமாகும் அபூர்வ காட்சியை காணலாம் இந்த அபூர்வ காட்சியை காண கன்னியாகுமரி கடற்கரையிலும் கன்னியாகுமரியை அடுத்த பணத் தோட்டம் பக்கம் உள்ள முருகன் குன்றம் வேல் முருகன் கோவில்மலையிலும் பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் ஏராளமாக கூடுவார்கள். 

மாலை 6 மணிக்கு சாயராட்சை தீபாராதனை நடக்கிறது. அதைத்தொடர்ந்து அம்மனுக்கு பலவகையான மலர்களால் புஷ்பாபிஷேகம் நடக்கிறது.
இரவு 8 மணிக்கு அம்மனை வெள்ளிப் பல்லக்கில் எழுந்தருள செய்து கோவிலின் உள் பிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க மூன்று முறை வலம் வரச் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. 

பின்னர் அம்மனை வெள்ளி சிம்மாசனத்தில் அமரச்செய்து தாலாட்டு நிகழ்ச்சியும் அதைத்தொடர்ந்து அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது. இதே போல முருகன்குன்றம்  வேல்முருகன் கோவிலில் நிலாச்சோறு விருந்தும் நடக்கிறது.
Tags:    

Similar News