லைஃப்ஸ்டைல்
கண்புரையும், அதற்கான தீர்வு முறைகளும்...

கண்புரையும், அதற்கான தீர்வு முறைகளும்...

Published On 2020-11-13 08:07 GMT   |   Update On 2020-11-13 08:07 GMT
சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கு கண்புரை நோய் எளிதில் ஏற்பட்டு விடுகிறது. அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே கண்புரையை அகற்ற முடியும்.
கண்புரை என்றால் என்ன?

மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரும் கண்களால் காண வேண்டும் என்றால் கருவிழிக்கு பின்னால் உள்ள லென்ஸ் மூலம்தான் பார்க்க முடியும். அந்த லென்சில் உள்ள ஒரு வெண்மையான தோல் படலம் பரவி பார்வையை மறைத்து நாளடைவில் ஒரு வெண் படலமாக மாறி விடுகிறது. இது தான் கண்புரை எனப்படுகிறது. இதை கிராமங்களில் கண்ணில் பூ விழுந்து விட்டது என்று கூறுகிறார்கள்.

முன்பு 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே வந்த இந்த கண்புரை நோய் தற்காலத்தில் வயது வித்தியாசமின்றி பிறந்த குழந்தைகளுக்குக் கூட கண்புரை ஏற்படுகிறது. குழந்தை பருவத்தில் டி.வி. பார்ப்பது, செல்போன் வீடியோ கேம் பார்ப்பது போன்ற காரணங்களினாலும், தற்கால உணவு பழக்கங்களாலும் கண்புரை நோய் குழந்தைகளையும் தாக்க தொடங்கி விட்டன.

சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கு கண்புரை நோய் எளிதில் ஏற்பட்டு விடுகிறது. கேட்ராக்ட் வந்து விட்டது என்ற உடன் கண்ணாடி அணிந்தால் போதும், சொட்டு மருந்து விட்டால் போதும் என்று நினைத்தால் அது தவறான எண்ணம். அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே கண்புரையை அகற்ற முடியும்.

5 நிமிடங்களில்...

கண்களில் அறுவை சிகிச்சை என அச்சம் தேவையில்லை. ஊசி இல்லை. தையல் இல்லை. வலி இல்லை, நவீன மருத்துவ முறையில் பாக்கோ எமுல்சிபிகேஷன் முறைப்படி மிக எளிதாக 5 நிமிடங்களில் கண்புரை அகற்றப்பட்டு அன்றே வீட்டுக்கு திரும்பலாம். பாக்கோ முறையில், பாதிக்கப்பட்ட கண் உள்விழி லென்சை அகற்றிவிட்டு செயற்கையாக உள்விழி லென்ஸ் பொருத்தப்படுகிறது. இவை அனைத்தும் 5 நிமிடங்களில் செய்யப்பட்டு இழந்த பார்வையை மீட்டுத் தருகிறது.

வெளிநாடுகளிலும், உள்நாடுகளிலும் தயாரிக்கப்பட்ட தரமான, நவீன லென்ஸ்கள் கிட்டப்பார்வை, தூரப் பார்வைக்கு ஏற்றபடி உள்விழி லென்ஸ் பொருத்தப்படுகிறது. கண்புரை ஏற்பட்ட உடன் உரிய கண் மருத்துவரை அணுக வேண்டும். அவரது ஆலோசனைப்படி கண்புரை தொடக்க நிலையில் இருந்தால் பெக்கோ முறையில் கண்புரையை அகற்றிவிடலாம். கண்புரையை வளர விடுவது நல்லதல்ல.

கண்புரை அறுவை சிகிச்சைக்குப் பின்னர் மறுநாளே அனைத்து வேலைகளையும் செய்யலாம். கண்களை மறைக்கும் பச்சைக்கலர் துணி தேவையில்லை. கருப்பு கண்ணாடி மட்டும் 5 நாட்கள் அணிந்தால் போதும். சொட்டு மருந்து 30 நாட்களுக்கு கண்ணில் ஊற்றிக் கொள்ள வேண்டும். காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் கட்டணமில்லா அறுவை சிகிச்சை மற்றும் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம்.

-டாக்டர் கே.கமல்பாபு, கண் அறுவை சிகிச்சை நிபுணர், வாசன் கண் மருத்துவமனை, அண்ணா நகர், மதுரை.
Tags:    

Similar News