செய்திகள்
லதா

கருங்கல் பகுதியில் குழந்தைகளிடம் நகை பறித்த பெண் கைது

Published On 2021-04-11 12:31 GMT   |   Update On 2021-04-11 12:31 GMT
ஓடும் பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி குழந்தைகளிடம் நகை பறித்த வழக்கில் பெண் கைது செய்யப்பட்டார்.
கருங்கல்:

புதுக்கடை அருகே காடஞ்சேரி பரவிளையை சேர்ந்த வினோத்குமார் மனைவி சுபலா. இவர் சம்பவத்தன்று தனது ஒரு வயது குழந்தையுடன் புதுக்கடையில் இருந்து கருங்கலுக்கு வேனில் புறப்பட்டார். அப்போது, அருகில் அமர்ந்திருந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் குழந்தையின் கையில் கிடந்த 2 கிராம் எடையுள்ள 2 தங்க காப்புகளை திருடி சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதேபோன்று புதுக்கடை அருகே பார்த்திபபுரம் பகுதியைச் சேர்ந்த வினோத் மனைவி பவித்ரா (29) தனது குழந்தையுடன் பரசேரியில் இருந்து கருங்கலுக்கு பஸ்சில் புறப்பட்டார். அவர் கருங்கலில் இறங்கிய போது குழந்தையின் கழுத்தில் கிடந்த 1¼ பவுன் தங்க சங்கிலி திருடப்பட்டிருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் இந்த இரண்டு சம்பவங்களிலும் நெல்லை மாவட்டம் தாழையூத்து பகுதியை சேர்ந்த செல்வராஜ் மனைவி பாப்பாத்தி என்ற லதாவுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இவர் கருங்கல் பகுதியில் சுற்றி திரிந்து கூட்டமான பஸ்களில் ஏறி கூட்ட நெரிசலை சாதகமாக பயன்படுத்தி குழந்தைகள் மற்றும் பெண்களிடம் கைவரிசை காட்டி வந்துள்ளார். இதையடுத்து லதாவை கருங்கல் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் மீது கருங்கல் போலீஸ் நிலையத்தில் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News