செய்திகள்
கோப்புப்படம்

மும்பையில் பெண் என்ஜினீயரின் ஏ.டி.எம் கார்டில் இருந்து ரூ.3 லட்சம் திருட்டு

Published On 2019-11-05 08:54 GMT   |   Update On 2019-11-05 08:54 GMT
மும்பையில் பெண் என்ஜினீயரின் ஏ.டி.எம் கார்டில் இருந்து ரூ.3 லட்சம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை:

மும்பை கிழக்கு பகுதியில் உள்ள கன்சுமார்க் பகுதியை சேர்ந்த பெண் என்ஜினீயர் ஒருவரின் ஏ.டி.எம். கார்டில் இருந்து மர்மநபர்கள் ரூ.3 லட்சத்தை திருடி உள்ளனர்.

அந்த பெண் என்ஜினீயர் தற்போது மகப்பேறு விடுமுறையில் வீட்டில் இருக்கிறார். அவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை கவனித்து வரும் அவருக்கு செல்போனில் 22-ந்தேதி அதிகாலை 2.30 மணிக்கு ஒரு அழைப்பு வந்தது.

அதைத்தொடர்ந்து சில மெசேஜ்களும் வந்துள்ளது. அதில் அவரது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டது தெரிய வந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அவர் கன்சுர்மார்க் போலீசில் புகார் செய்தார். மேலும் வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். விசாரணையில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.3.3 லட்சம் திருடப்பட்டது தெரிய வந்தது.

அவரது ஏ.டி.எம். தகவல்களை திருடி மர்மநபர்கள் அதன் மூலம் வெளிநாட்டில் 56 முறை கார்டை பயன்படுத்தி இந்த பணத்தை திருடி உள்ளனர். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீபாவளி கொண்டாட்டத்துக்கு செலவு செய்வதற்காக வங்கி கணக்கில் இந்த பணத்தை வைத்துள்ளனர். பணம் திருட்டு போனதால் எங்கள் குடும்பத்தினரின் தீபாவளி கொண்டாடும் திட்டம் பாழாகிவிட்டது என அப்பெண்ணின் கணவர் கூறினார்.

ஏற்கனவே இந்தியாவை சேர்ந்த 13 லட்சம் கிரெடிட், டெபிட் கார்டுகளின் தகவல்கள் இணையதளத்தில் விற்பனைக்கு வந்துள்ளதாக வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. இதுகுறித்து சைபர் கிரைம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News