செய்திகள்

காதலிக்கு வேறு ஒருவருடன் திருமண நிச்சயதார்த்தம்- வாலிபர் தீக்குளிக்க முயற்சி

Published On 2019-05-17 17:28 GMT   |   Update On 2019-05-17 17:28 GMT
காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயதார்த்தம் நடக்க உள்ளதால் மனம் உடைந்த வாலிபர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றார்.
ராமநாதபுரம்:

பரமக்குடி அருகே உள்ள பொன்னையாபுரம் பகுதியை சேர்ந்தவர் பூமிநாதன் என்பவரின் மகன் லோகேஸ் குமார்(வயது26). பி.எஸ்.சி. பட்டதாரியான இவர் பரமக்குடியை சேர்ந்த பெண் ஒருவரை கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தாராம். இந்நிலையில் அந்த பெண்ணிற்கு இன்று (வெள்ளிக்கிழமை) திருமணம் நிச்சயதார்த்தம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த வாலிபர் லோகேஸ்குமார் மன வேதனை அடைந்து காதலியை கைப்பிடிக்க முயற்சிகள் மேற்கொண்டுள்ளார்.

இதில் தோல்வி ஏற்படவே மனம் உடைந்த வாலிபர் நேற்று காலை ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். உடனடியாக அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி உள்ளே அழைத்து சென்று விசாரித்தனர்.

இந்த விசாரணையில் வாலிபர் லோகேஸ்குமார், 6 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்ததாகவும், இந்நிலையில் வேறு ஒருவருடன் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் பலமுயற்சிகள் செய்தும் முடியாததால் வேறுவழியின்றி தற்கொலை செய்துகொள்ள வந்ததாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து போலீசார் அவருக்கு அறிவுரை கூறி தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வாலிபர் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News