செய்திகள்
ஆலங்குளத்தில் 500 குடும்பங்களுக்கு இலவசமாக காய்கறி
ஆலங்குளம் காய்கறி வியாபாரிகள் சங்கம் மற்றும் காவல்துறை சார்பில் 500 குடும்பங்களுக்கு இலவச காய்கனி வினியோகம் ராஜீவ் நகர் மாரியம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
ஆலங்குளம்:
ஆலங்குளம் காய்கறி வியாபாரிகள் சங்கம் மற்றும் காவல்துறை சார்பில் 500 குடும்பங்களுக்கு இலவச காய்கனி வினியோகம் ராஜீவ் நகர் மாரியம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னி வளவன் தலைமை தாங்கினார்.
தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இலவச காய்கனி வழங்கி தொடங்கி வைத்தார். ராஜீவ் நகர் மற்றும் காமராஜ் நகர் பகுதி பொதுமக்களுக்கு காய்கனி வினியோகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் கண்மணி, தையல்நாயகி காய்கனி வியாபாரிகள் சங்க தலைவர் சந்திரன் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஒருநாள் விட்டு ஒருநாள் காவல்துறையுடன் இணைந்து பொதுமக்களுக்கு, வியாபாரிகள் காய்கனி வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டது.