செய்திகள்
16 வயது பெண்ணை சீரழித்த 60 வயது ஆசாமி... யாருக்கும் தெரியாமல் குழந்தை பெற்று அனாதையாக வீசிய அவலம்
புதுடெல்லியில் 60 வயது முதியவரால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண், குழந்தை பெற்றெடுத்து குப்பைத்தொட்டியில் அனாதையாக போட்டுவிட்டுச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுடெல்லி:
வடக்கு டெல்லியின் ஒரு தெருவில் உள்ள குப்பைத் தொட்டியில் பச்சிளம் குழந்தை அனாதையாக கிடப்பதாக கடந்த சனிக்கிழமையன்று இரவு காவல்துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, பச்சிளம் குழந்தை துணியால் சுற்றப்பட்டு கிடந்தது தெரியவந்தது. குழந்தையை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குழந்தையைப் பற்றிய எந்த தகலும் கிடைக்கததால் அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு இளம்பெண் ஏதோ ஒரு பொருளை துணியால் சுற்றி கொண்டு வருவது தெரியவந்தது. அந்த பெண்ணை பிடித்து விசாரித்தபோது அந்த பெண் கூறிய தகவல் போலீசாரை அதிர்ச்சியடைய வைத்தது.
கடந்த 9 மாதங்களுக்கு முன்பு, பக்கத்து வீட்டில் வசிக்கும் 60 வயது முதியவர் ஒருவர் தன்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டதால் கர்ப்பமடைந்ததாகவும், வீட்டின் மொட்டை மாடியில் யாருக்கும் தெரியாமல் யார் உதவியும் இல்லாமல் குழந்தையை பெற்றெடுத்த பின்னர், குப்பைத் தொட்டியில் போட்டதாகவும் கூறி உள்ளார்.
அவரை இந்த நிலைக்கு ஆளாக்கிய முதியவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். போக்சோ சட்டத்தின்கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்தப் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது, கர்ப்பமடைந்தது, குழந்தை பெற்றது என இவ்வளவு நடந்தும், அவரது பெற்றோருக்கு தெரியாமல் இருந்ததுதான் மிகவும் கொடுமையான விஷயம்.