செய்திகள்
நாங்குநேரி அருகே மொபட் மீது அரசு பஸ் மோதி கணவன்-மனைவி படுகாயம்
நாங்குநேரி அருகே மொபட் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் கணவன், மனைவி படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
களக்காடு:
தூத்துக்குடி மாவட்டம் வாகைகுளத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 62), தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் நாங்குநேரி மூன்றடைப்பு அருகே உள்ள செங்குளத்தில் நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு தனது மனைவி பார்வதியம்மாளுடன் (55) வந்து கொண்டிருந்தார்.
மூன்றடைப்பு ரோட்டில் அவர்கள் வந்த போது நெல்லையில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற அரசு பஸ் மொபட்டின் மீது மோதியது. இதில் செல்வராஜ், அவரது மனைவி பார்வதியம்மாள் படுகாயமடைந்தனர். இதையடுத்து அக்கம், பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்த புகாரின் பேரில் மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.