நுரையீரலை பாதுகாக்க புகைப்பிடித்தலை புறக்கணிப்போம் - ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்
சென்னை:
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள டுவிட்டர் பதில் கூறியிருப்பதாவது:-
மனித உடலின் செயல்பாடுகளுக்கு ஒவ்வொரு உறுப்பும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றாலும், உடலுக்கு உயிர் சக்தியைத்தரும் உன்னதப்பணியாம் வாயுப்பரிமாற்றத்தை மேற்கொள்ளும் இன்றியமையாப் பணியை நுரையீரல் செய்து வருகிறது.
காற்றில் உள்ள பிராண வாயுவை ரத்தத்தில் சேர்த்து, ரத்தத்தில் உள்ள கரியமில வாயுவை பிரித்து உடலில் இருந்து வெளியேற்றுவது, இதயத்தை அதிர்வுகளில் இருந்து காப்பாற்றுவது, முக்கிய வேதிப்பொருட்களை உற்பத்தி செய்வது, சில வேதிப்பொருட்களை செயலிழக்கச் செய்வது போன்ற உடலுக்கு உயிர் தரும் பணிகளை நுரையீரல் மேற்கொள்வதால், இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து செப்டம்பர் 25-ம் நாள் உலக நுரையீரல் தினமாக கொண்டாடப்படுகிறது.
நுரையீரலைப் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை ஆகும். புகைப்பிடித்தல் காரணமாக கரித்துகள்கள் நுரையீரலுக்குள் சென்று அங்கேயே படிந்து, இவற்றில் உள்ள நிகோடின் என்ற வேதிப்பொருள் ரத்தத்தில் உள்ள கனிமப்பொருள்களின் அளவுகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதால் பல்வேறு தீங்குகள் ஏற்படுகின்றன.
புகைப்பிடிப்பவர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களுக்கு அருகில் உள்ளவர்களுக்கும் இந்தப் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இவற்றை தவிர்க்க, உலக நுரையீரல் தினமான இன்று அனைவரும் புகைப்பிடித்தலை புறக்கணிப்போம் என்ற உறுதிமொழியை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்...அமெரிக்காவில் 23 ஆயிரம் ஆண்டு பழமையான மனிதனின் கால்தடம் கண்டுபிடிப்பு