செய்திகள்
வாணியம்பாடி அருகே மின்சாரம் தாக்கி கட்டிட மேஸ்திரி பலி
வாணியம்பாடி அருகே மின்சாரம் தாக்கி கட்டிட மேஸ்திரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாணியம்பாடி:
வாணியம்பாடியை அடுத்த நெக்குந்தி பகுதியைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன் (வயது 45), கட்டிட மேஸ்திரி. இவரின் மனைவி 3-வது பிரசவத்துக்காக ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
நேற்று அதிகாலை வாணியம்பாடி மற்றும் நெக்குந்தி பகுதியில் மழை பெய்தபோது, கொட்டும் மழையில் நனைந்தபடி அவர் வீட்டுக்கு வந்தார். தனது கூரை வீட்டில் மின் விளக்கு சுவிட்சை இயக்கியபோது, மின்சாரம் தாக்கி பரமேஸ்வரன் தூக்கி வீசப்பட்டார்.
அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள், பரமேஸ்வரன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.