ராஜபாளையம் அருகே விபத்து- கார் டிரைவர் பலி
ராஜபாளையம்:
ராஜபாளையம் தர்மாபுரம் தெருவைச் சேர்ந்தவர் சங்கரநாராயணன் (வயது50). இவர் அதே பகுதியில் உள்ள நூற்பாலையில் கார் டிரைவராக பணியாற்றி வந்தார்.
இன்று காலை சங்கரநாராயணன் தனது மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார்.
ராஜபாளையம் தென்றல் நகர் செண்பகத்தோப்பு ரோட்டில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது. எதிர்மேடு அருகே வந்தபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சங்கரநாராயணன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மேல ஆவாரம்பட்டி தெருவைச் சேர்ந்த குமார் (37), அவரது மனைவி ராஜேஸ்வரி (28), 7 மாத கைக்குழந்தை அமிர்தா ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டது. இவர்கள் 3 பேரும் ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
விபத்து தொடர்பாக வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.