ராமேசுவரத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை - மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
ராமேசுவரம்:
இலங்கையையொட்டி உள்ள வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக பாம்பன் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது. ஆனால் இன்று காலை வரை ராமேசுவரம், பாம்பன் சுற்று வட்டாரப்பகுதிகளில் இயல்பு நிலையே காணப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை 10 மணியளவில் திடீரென ராமேசுவரத்தில் கருமேகங்கள் திரண்டன. சிறிது நேரத்தில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது. தனுஷ்கோடி, பாம்பன் பகுதியிலும் மழை பெய்தது.
வானிலை மையத்தின் எச்சரிக்கையை அடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்வதற்கான அனுமதி டோக்கனை மீன்வளத்துறை வழங்கவில்லை. இதனால் 400-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்தன.