செய்திகள்
கோப்புப்படம்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 2 மாதங்களில் தொடங்கும் - மத்திய அரசு தகவல்

Published On 2021-01-28 00:14 GMT   |   Update On 2021-01-28 00:14 GMT
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 2 மாதங்களில் தொடங்கும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
புதுடெல்லி:

தமிழக மக்களுக்கு உலகத் தரத்திலான சிகிச்சை அளிக்கும் வகையில் மதுரையில் 750 படுக்கைகள், 100 மருத்துவ படிப்புகளுடன் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதைத் தொடர்ந்து, மதுரை தோப்பூரில் 224.24 ஏக்கர் பரப்பளவில் மருத்துவமனை அமைக்க கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அடிக்கல் நாட்டிய 45 மாதங்களில் பணிகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு மருத்துவமனை கொண்டுவரப்படும் என்று அப்போது தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் பணிகள் தொடங்கியபாடில்லை.

மருத்துவமனை கட்டுமானப் பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என தமிழக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தனர். அப்போது, மருத்துவமனை கட்டுமானப் பணிக்கு கடன் வழங்கும் ஜப்பான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் இறுதியாகவில்லை என்று மத்திய அரசு பதில் தெரிவித்தது.

இந்த நிலையில் அந்த ஒப்பந்தம் இறுதியாவதற்கான சூழ்நிலை தற்போது வந்துள்ளது. அதுமட்டுமின்றி, தொடக்கத்தில் சுமார் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் கட்டத் திட்டமிடப்பட்டிருந்த மருத்துவமனையை தற்போது சுமார் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் கட்டுவதற்கு மத்திய அரசு முன்வந்துள்ளது.

இதற்கிடையே, மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடந்த வாரம் மத்திய சுகாதாரத்துறை செயலாளரை சந்தித்து இதுதொடர்பாக பேசினார். அப்போது, மருத்துவமனை பணிக்கு நிதி வழங்கும் ஜப்பான் நிறுவனம் வருகிற மார்ச் மாத இறுதிக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என தெரிவித்ததாக வெங்கடேசன் கூறினார்.

இதன் அடிப்படையில் அதற்கான பூர்வாங்க பணிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. எனவே, மார்ச் மாத இறுதிக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி பணிகள் உடனே தொடங்கும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எப்படி இருந்தாலும் இன்னும் 2 மாதங்களில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News