செய்திகள்
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர்கள்

டிஎன்பிஎல் குவாலிபையர் 2 ஆட்டம்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திண்டுக்கல் அணிகள் நாளை மோதல்

Published On 2021-08-12 09:43 GMT   |   Update On 2021-08-12 09:43 GMT
டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் நாளை நடக்கவுள்ள குவிலிபையர் 2 ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.

சென்னை:

5-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல். ) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் கடந்த 8-ந் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிந்தன. இதன் முடிவில் திருச்சி வாரியர்ஸ் முதல் இடத்தையும், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 2-வது இடத்தையும், திண்டுக்கல் டிராகன்ஸ் 3-வது இடத்தையும், கோவை கிங்ஸ் 4-வது இடத்தையும் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.

நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் , திருப்பூர் தமிழன்ஸ் ஆகிய அணிகள் முறையே முறையே 5 முதல் 8-வது இடங்களைப் பிடித்து வெளியேறின.

பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் 10-ந் தேதி தொடங்கியது. அன்று நடந்த ‘குவாலிபையர் 1’ ஆட்டத்தில் திருச்சி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசை தோற்கடித்து முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

எலிமினேட்டர் ஆட்டம் நேற்று நடந்தது. இதில் திண்டுக்கல் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் கோவையை வீழ்த்தி ‘குவாலிபையர் 2’ ஆட்டத்துக்கு தகுதி பெற்றது. தோல்வி அடைந்த கோவை அணி வெளியேறியது.

‘குவாலிபையர் 2’ ஆட்டம் நாளை (13-ந் தேதி) இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன. திருச்சி வாரியர்சுடன் இறுதிப்போட்டியில் மோதப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

2 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 4-வது முறையாக இறுதிப்போட்டிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது. திண்டுக்கல் அணி தொடர்ந்து 3-வது முறையாக இறுதிப்போட்டிக்கு நுழைந்து விட வேண்டும் என்ற வேட்கையில் உள்ளது. 

Tags:    

Similar News