செய்திகள்
கொலை

திருவண்ணாமலையில் ஆட்டோ டிரைவர் கல்லால் தாக்கி கொலை

Published On 2020-01-14 13:04 GMT   |   Update On 2020-01-14 13:04 GMT
திருவண்ணாமலையில் மது குடிப்பதற்கு பணம் கொடுத்து வாங்கிய தகராறில் ஆட்டோ டிரைவர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை கெங்கையம்மன் நகரை சேர்ந்தவர் சங்கர் (வயது 30), ஆட்டோ டிரைவர். இவரது மனைவி கனகவள்ளி. இவர்களுக்கு 2 மகன்கள். திருவண்ணாமலை எடப்பாளையம் பகுதியை சேர்ந்த ஆனந்தன், சங்கரின் நண்பராவார். ஆனந்தன் பழக்கடை வைத்துள்ளார். இருவரும் நேற்று முன்தினம் இரவு திருவண்ணாமலையில் வேட்டவலம் சாலையில் உள்ள ஏந்தல் நான்கு முனை சந்திப்பு பகுதியில் பேசிக்கொண்டிருந்துள்ளனர்.

அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே மது குடிப்பதற்கு பணம் கொடுத்து வாங்கிய பிரச்சினையில் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த ஆனந்தன் திடீரென கல்லால் சங்கரின் தலை மற்றும் மார்பில் தாக்கி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த சங்கர் நெஞ்சை பிடித்தவாறு மயங்கி விழுந்தார்.

அந்த பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர்கள் பரிசோதித்தபோது சங்கர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து பழக்கடை உரிமையாளர் ஆனந்தனை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News