செய்திகள்
கொள்ளை

தஞ்சையில் 2 வீடுகளில் 45 பவுன் நகை- 4½ கிலோ வெள்ளி கொள்ளை

Published On 2019-10-01 08:59 GMT   |   Update On 2019-10-01 08:59 GMT
தஞ்சையில் 2 வீடுகளில் 45 பவுன் நகை- 4½ கிலோ வெள்ளி கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர்:

தஞ்சை மேலவஸ்தா சாவடி அசோக் நகர் 8-வது தெருவில் வசிப்பவர் சாமிநாதன் (வயது 45), விவசாயி. இவரது மாடி வீட்டில் அவரது அக்காள் இந்திரா (53) தனது கணவர் ஜெயபால் மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

சாமிநாதன், இந்திரா ஆகியோருக்கு சொந்தமான நிலம் சோழன்குடிக்காட்டில் உள்ளது. அங்கு சாகுபடி பணிகள் நடைபெற்று வந்ததால் இருவரும் நேற்று வீட்டை பூட்டி விட்டு அங்கு சென்று தங்கி விட்டனர்.

இந்த நிலையில் இன்று காலை வயலில் இருந்து சாமிநானும், இந்திராவும் தங்களது வீட்டுக்கு வந்தனர். அப்போது இருவரது வீட்டு கதவும் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். சாமிநாதன் வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு இதில் இருந்த 30 பவுன் நகை மற்றும் ரொக்க பணம் ரூ.1500 ஆகியவை கொள்ளை போய் இருந்தது. இந்திரா வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு 15 பவுன் நகை மற்றும் 4½ கிலோ வெள்ளி பாத்திரங்கள் திருட்டு போய் இருந்தன.

பூட்டியிருந்த வீட்டை நோட்டமிட்டு மர்ம கும்பல் நகை- வெள்ளி பொருட்களை திருடிச் சென்றது தெரிய வந்தது. கொள்ளை போன பொருட்களின் மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும்.

இந்த கொள்ளை சம்பவம் பற்றி தஞ்சை பல்கலைக்கழக போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.

பூட்டிய வீட்டில் நகை- பணத்தை கொள்ளையடித்த கும்பலை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News