உள்ளூர் செய்திகள்
நெல்லை மாவட்டத்தில் யூனியன் அலுவலக ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்
நெல்லை மாவட்டத்தில் யூனியன் அலுவலக ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:
நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் இன்று ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினார்கள்.
இதைத்தொடர்ந்து பாளையில் உள்ள யூனியன் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக விடுப்பு எடுத்து பணிக்கு வரவில்லை.
ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஒரு நாள் விடுப்பு போராட்டம் நடைபெற்றது.
இதனால் பாளை யூனியன் அலுவலகத்தில் கீழ்த்தளத்தில் உள்ள ஊழியர்கள் அறை பூட்டப்பட்டு சாவியை அதிகாரிகள் வசம் ஒப்படைத்தனர். பாளை யூனியன் அலுவலகத்தில் மட்டும் 26 ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் இன்று பணிக்கு வரவில்லை.
இதுபோல நெல்லை மாவட்டத்திலுள்ள ராதாபுரம் யூனியன், நாங்குநேரி யூனியன், களக்காடு யூனியன், சேரன்மாதேவி யூனியன், அம்பை யூனியன், மானூர் யூனியன், பாப்பாக்குடி யூனியன் உள்பட 9 யூனியன் அலுவலகத்திலும் பெரும்பாலான ஊழியர்கள் இன்று பணிக்கு வரவில்லை.
இதனால் யூனியன் அலுவலகத்தில் பணிகள் பாதிக்கப்பட்டது.பல யூனியன் அலுவலகங்கள் ஊழியர்களின் அறைகள் பூட்டப்பட்டிருந்தது அதிகாரிகள் மட்டும் இன்று பணிக்கு வந்திருந்தனர்.