செய்திகள்
311 இந்தியர்களை நாடு கடத்தியது மெக்சிகோ
மெக்சிகோ நாட்டில் தொடர்ந்து தங்குவதற்கு உரிய ஆவணங்கள் இல்லாத 311 இந்தியர்களை, அந்நாட்டு அரசு திருப்பி அனுப்பியுள்ளது.
மெக்சிகோ சிட்டி:
வாழ்வாதாரம் தேடி மெக்சிகோவில் இருந்து பல்வேறு மக்கள் அமெரிக்கா நாட்டிற்குள் நுழைய முற்படுவது பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. மெக்சிகோ அமெரிக்கா எல்லைப்பகுதிகள் வழியாக சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைபவர்களை டிரம்ப் அரசு சிறையில் அடைத்து வந்தது. மேலும் அடைக்கலம் தேடி வருபவர்களை எல்லைப்பகுதியிலேயே தடுத்து நிறுத்துமாறு குடியுரிமைத் துறை அதிகாரிகளுக்கு டிரம்ப் உத்தரவிட்டார்.
மெக்சிகோவின் எல்லைகள் வழியாக அமெரிக்காவிற்குள் நுழையும் மக்கள் மீது மெக்சிகோ அரசு நடவடிக்கை எடுக்காவிடில், மெக்சிகோவின் அனைத்து இறக்குமதி பொருட்கள் மீதான வரிகள் அதிகமாக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜூன் மாதம் அச்சுறுத்தித்தினார்.
இதையடுத்து மெக்சிகோ குடியுரிமைத்துறை அதிகாரிகள் எல்லைப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். மேலும் மெக்சிகோ நாட்டில் , உரிய ஆவணங்கள் இல்லாமல் குடியிருப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், மெக்சிகோ நாட்டில் தொடர்ந்து தங்குவதற்கான அனுமதி இல்லாமல் தங்கி இருந்த 311 இந்தியர்களை டோலுகா நகரிலிருந்து போயிங் 747 விமானத்தின் மூலம் டெல்லிக்கு நேற்று திருப்பி அனுப்பியது.