செய்திகள்
உத்தவ் தாக்கரே

கர்நாடக பகுதிகளை மராட்டியத்துடன் இணைப்போம்: உத்தவ் தாக்கரே உறுதி

Published On 2021-01-18 01:57 GMT   |   Update On 2021-01-18 01:57 GMT
மராத்தி பேசும் மக்கள் வசிக்கும் கர்நாடக பகுதிகளை மராட்டியத்துடன் இணைப்போம் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உறுதிபட தெரிவித்துள்ளார்.
மும்பை :

மராட்டிய எல்லையையொட்டி கர்நாடக ஆட்சிக்கு உட்பட்ட பல கிராமங்களில் மராத்தி மொழி பேசும் மக்கள் அதிகளவில் வசிக்கிறார்கள். இந்த கிராமங்களை தங்களது மாநிலத்துடன் இணைக்க மராட்டியம் முயற்சி செய்து வருகிறது. இது தொடர்பாக மராட்டியம், கர்நாடகம் இடையே பல ஆண்டு காலமாக தகராறு இருந்து வருகிறது.

இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இதேபோல மராட்டிய ஏகிகாரன் சமிதி அமைப்பும் பெலகாவி உள்ளிட்ட சில பகுதிகளை மராட்டியத்துடன் இணைக்க போராடி வருகிறது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 17-ந் தேதியை தியாகிகள் தினமாக அனுசரித்து வருகின்றனர்.

இந்தநிலையில் தியாகிகள் தினமான நேற்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

கர்நாடக ஆக்கிரமிப்பு மராத்தி பேசுபவர்கள் வசிக்கும், பாரம்பரிய பகுதிகளை மராட்டியத்திற்கு கொண்டு வருவதுதான் மாநில எல்லை போராட்டத்திற்கு உயிர் தியாகம் செய்தவர்களுக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும். நாம் இந்த விவகாரத்தில் ஒற்றுமையாகவும், உறுதியாகவும் இருக்கிறோம். தியாகிகளுக்கு இந்த உறுதி மொழியுடன் மரியாதை செலுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News