தொழில்நுட்பம்
விசாரணை பிடியில் ஃபேஸ்புக், ஆப்பிள், ட்விட்டர்
ஐரோப்பிய யூனியனின் புதிய விதிகளை மீறிய விவகாரத்தில் ஃபேஸ்புக் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. #Facebook
ஐரோப்பிய யூனியன் சமீபத்தில் அறிவித்த புதிய பொது தகவல் பாதுகாப்பு வழிமுறைகளை மீறியதாக ஃபேஸ்புக் நிறுவனம் மீது விசாரணை செய்யப்பட இருக்கிறது.
ஃபேஸ்புக் நிறுவனம் மீது ஏழு குற்றச்சாட்டுகளும், வாட்ஸ்அப் மீது இரண்டு, இன்ஸ்டாகிராம் மீது ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. மற்ற நிறுவனங்களான ஆப்பிள் மற்றும் ட்விட்டர் உள்ளிட்டவை இரண்டு குற்றச்சாட்டுகளிலும், லின்க்டுஇன் மீது ஒரு குற்றச்சாட்டு பதிவாகி இருக்கிறது.
இவற்றின் மீதான விசாரணை மற்றும் இறுதி முடிவுகள் இந்த ஆண்டு இறுதிக்குள் எட்டப்படும் என தெரிகிறது. பொது தகவல் பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை கண்காணிப்பதே எங்களது நோக்கம் என ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது.
மே 25, 2018 முதல் டிசம்பர் 31, 2018 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் சுமார் 2,864 குற்றச்சாட்டுக்களை தகவல் பாதுகாப்பு ஆணையம் பெற்றிருக்கிறது. பயனர் விவரங்களை கையாண்டதாக ஃபேஸ்புக் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் பயனர் விவரங்களை ஃபேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ளும் முறையை எவ்வாறு செயல்படுத்துகிறது என்ற சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.
பயனர் தங்களது விவரங்களை இயக்க எந்தளவு வசதி அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்ற வகையில் ட்விட்டர் மீது விசாரணை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வெளிப்படைத்தன்மை சார்ந்த விவகாரங்கள் தொடர்பாக ஆப்பிள் மீதும், லின்க்டு மீது பயனர்களின் ப்ரோஃபைல் மற்றும் விளம்பரங்கள் பற்றி விசாரணை நடைபெற இருக்கிறது.