ஆன்மிகம்
அனுமன்

அனுமன் எழுதிய அற்புதக் காவியம்

Published On 2020-11-06 07:27 GMT   |   Update On 2020-11-06 07:27 GMT
இதிகாச காவியங்களில் ஒன்றாகத் திகழ்வது ராமாயணம். அதை பல கவிஞர்களும், தங்கள் கற்பனைக்கு எட்டியபடி விவரித்துக் கூறியிருக்கிறார்கள்.
இதிகாச காவியங்களில் ஒன்றாகத் திகழ்வது ராமாயணம். அதை பல கவிஞர்களும், தங்கள் கற்பனைக்கு எட்டியபடி விவரித்துக் கூறியிருக்கிறார்கள். என்றாலும் அதற்கான மூலத்தை அருளியவர் வால்மீகி முனிவர் ஆவார். இவர் எழுதிய ராமாயணமே, முதன்மையானது. அப்படிப்பட்ட ராமனின் காவியத்தை, ராமனின் இரண்டு புதல்வர்களான லவன்- குசன் ஆகியோருக்கு அவர் சொல்லிக்கொடுத்தார். அதனை ராமரின் அரண்மனையில் பாடிய அந்தச் சிறுவர்களை, ராமபிரானே பாராட்டினார். அதன்பிறகான நாட்களில்தான் அந்த இரு சிறுவர்களும் தன் பிள்ளைகள் என்பதையே ராமர் அறிந்தார். பின்னர் அவர்களுடன் இணைந்தார்.

லவன் -குசன் இருவரும் ராமரிடம் சென்றடைந்த நிம்மதியோடு, ஒருநாள் இமய மலைச் சாரலில் ஒரு சிகரத்தின் மீது ஏறிக்கொண்டிருந்தார் வால்மீகி முனிவர். சிகரத்தின் சரிவுகளில் இருந்த பாறைகளின் மீதும், கற்களின் மீதும் கல்வெட்டுக்களாகச் சில வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தது. அவற்றைப் படிக்கத் தொடங்கிய வால்மீகி மெய்சிலிர்த்துப் போனார். அதில் செதுக்கியிருந்த வாசகங்கள் ராமபிரானின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை சித்தரிப்பதாக அமைந்திருந்தன. அதில் இருந்த ஒவ்வொரு வரிகளும்.. தான் எழுதிய ராமாயண காவியத்தின் வரிகளை விட, கவிதை நயமும் கருத்து நயமும் மிக்கவையாக இருப்பதை உணர்ந்து பிரமிப்பு அடைந்தார்.

‘இந்த பாறைகளில் ராமபிரானின் கதையை யார் செதுக்கியிருப்பார்கள்?’ என்று எண்ணினார். பாறைகளில் எழுதப்பட்டிருந்த ராம கதையைப் படித்தபடியே நடந்து சென்றவர், மலையின் சிகரத்தை அடைந்து விட்டார். அங்கே சிரஞ்சீவியான அனுமன், யோக நிஷ்டையில் அமர்ந்து, ராம நாமத்தை ஜெபித்துக் கொண்டிருந்தார். அவரது தியானத்தைக் கலைக்க விரும்பாத வால்மீகி முனிவர், தானும் அங்கு ஒரு ஓரமாக அமர்ந்து ராம நாமத்தை உச்சரிக்கத் தொடங்கினார்.

தன்னுடைய ராம நாம ஒலியோடு, இரண்டாவதாக மற்றொரு ஒலி கேட்பதை அறிந்த அனுமன், சட்டென்று கண்விழித்துப் பார்த்தார். அங்கு வால்மீகி முனிவர் அமர்ந்திருப்பதைக் கண்டார். எழுந்து சென்று, கண்மூடி தியானத்தில் இருந்த வால்மீகியின் முன்பாக வணங்கியபடி நின்றார். கண்விழித்த வால்மீகி தன் முன் அனுமன் நிற்பதைக் கண்டார்.

தன் மனதில் இருந்த சந்தேகத்தை அனுமனிடம் கேட்டார், வால்மீகி. “வாயு மைந்தனே.. நான் மலையேறி வரும்போது பாறைகளில் ராமரின் வரலாறு செதுக்கப்பட்டிருந்தது. அதனை யார் செதுக்கியது?”

உடனே அனுமன் “ராமரின் கல்யாண குணங்களையும், அவரது பெருமைகளையும் இங்கே காணும் கற்களில் நான்தான் எனது நகத்தால் கீறி எழுதினேன். ராமபிரானை ரிஷ்யமுக பர்வதத்தில் நான் சந்தித்தது முதல், பட்டாபிஷேகம் வரை எனக்குத் தெரிந்த ராம கதையை உருவாக்கினேன். ஆனாலும், தங்களின் ராமாயணத்துக்கு இது ஈடாகாது” என்று அடக்கத்துடன் கூறினார். மேலும், தான் கல்லில் செதுக்கிய ராமாயண காவிய வரிகளில் தவறேதும் இருந்தால், எடுத்துச் சொல்லும்படியும் வேண்டினார்.

வால்மீகி முனிவரின் கண்களில் நீர் கசிந்தது. ‘எத்தகைய சிறப்பான காரியத்தைச் செய்துவிட்டு, எவ்வளவு தன்னடக்கத்துடன் அனுமன் இருக்கிறான்’ என்பதை நினைத்து வால்மீகி முனிவரின் மனம் பெருமிதம் கொண்டது.

“வாயு புத்திரனே.. நீ ராமபிரானின் முதன்மை பக்தன். உன்னால் உண்டான ராமாயணத்தில் தவறு இருக்க முடியுமா? நீ எழுதிய காவிய வரிகளில் காணும் பக்திப் பரவசம் என்னை நெகிழ வைத்துவிட்டது. அதனால் ஏற்பட்ட ஆனந்தக் கண்ணீர் இது. நான் எழுதிய ராமாயணம் கூட இதற்கு இணையாகாது. உன்னுடைய ராமாயணத்தை உலகோர் படிக்கும்போது, என் ராமாயணம் காலப்போக்கில் மறைந்துவிடும்” என்றார்.

வால்மீகியின் வார்த்தையைக் கேட்ட அனுமன் மறுநொடியே, சிறிதும் தயக்கமின்றி பாறைகளில் தான் செதுக்கியிருந்த ராமாயண காவியத்தை தனது வாலால் அழித்தார்.

பதறிப்போனார் வால்மீகி. “அனுமனே.. எதற்காக இப்படிச் செய்தாய்?” என்றார்.

வால்மீகி முனிவரை வணங்கிய அனுமன், “நான் செய்தது பிழையாக இருந்தால் என்னை மன்னிக்கவும். தாங்கள் எழுதிய ராம காவியமே மிகச் சிறப்பானது. காலத்தால் அழியாதது. அதுதான் சிறந்தது என்று என்னுடைய ராமபிரானே பாராட்டியிருக்கிறார். அதற்கு ஈடுஇணை எதுவும் கிடையாது. இருக்கவும் கூடாது என்பதாலேயே இப்படிச் செய்தேன்” என்றார்.

அனுமனின் ராம பக்தியைப் பற்றி வால்மீகி முனிவருக்கு நன்றாகவே தெரியும். ஆனால் அவரது தியாகத்தை தற்போது அருகில் இருந்து அனுபவிக்கும் பாக்கியம் கிடைத்ததை எண்ணி நெகிழ்ந்து போனார். அனுமனை வாழ்த்தி விட்டு அங்கிருந்து அகன்றார், வால்மீகி.
Tags:    

Similar News