செய்திகள்
கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் 2-வது முறையாக 45 ஆயிரம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்

Published On 2021-02-25 03:44 GMT   |   Update On 2021-02-25 03:44 GMT
தமிழகத்தில் 2-வது முறையாக 45 ஆயிரம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 50 ஆயிரத்து 239 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 270 ஆண்கள், 193 பெண்கள் என மொத்தம் 463 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 169 பேரும், கோவையில் 46 பேரும், செங்கல்பட்டில் 30 பேரும், திருவள்ளூரில் 33 பேரும், குறைந்தபட்சமாக தருமபுரி, பெரம்பலூர், திருப்பத்தூரில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சியில் நேற்று ஒருவர்கூட பாதிக்கப்படவில்லை. தமிழகத்தில் இதுவரை8 லட்சத்து 49 ஆயிரத்து 629 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 5 லட்சத்து 13 ஆயிரத்து 389 ஆண்களும், 3 லட்சத்து 36 ஆயிரத்து 205 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 35 பேரும் அடங்குவர். இந்தப் பட்டியலில் 12 வயதுக்குட்பட்ட 30 ஆயிரத்து 76 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 846 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 4 பேரும், தனியார் மருத்துவமனையில் 2 பேரும் என 6 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். அந்தவகையில் தஞ்சாவூர், சென்னையில் தலா 2 பேரும், செங்கல்பட்டு, சேலத்தில் தலா ஒருவர் என 4 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இதுவரையில் 12 ஆயிரத்து 478 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து 469 பேர் நேற்று பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரையில் தமிழகத்தில் 8 லட்சத்து 33 ஆயிரத்து 89 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர். தற்போது சிகிச்சையில் 4 ஆயிரத்து 62 பேர் உள்ளனர்.

தமிழகத்தில் 36-வது நாளாக நேற்று 749 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் 14 ஆயிரத்து 43 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். அந்தவகையில் 13 ஆயிரத்து 705 பேர் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்தும், 338 பேர் ‘கோவேக்சின்’ தடுப்பு மருந்தும் போட்டுள்ளனர். அதில் 9 ஆயிரத்து 332 பேர் முதல்முறையாகவும், 4 ஆயிரத்து 711 பேர் 2-வது முறையாகவும் தடுப்பூசி போட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 4 லட்சத்து 14 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இதில் 3லட்சத்து 69 ஆயிரத்து 114 பேருக்கு முதல்முறையாகவும், 45 ஆயிரத்து 594 பேருக்கு இரண்டாவது முறையாகவும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.


Tags:    

Similar News