செய்திகள்
மதுகுடிக்க பணம் தரமறுத்ததால் பெயிண்டருக்கு கத்திக்குத்து - 2 பேர் கைது
பேரூர் அருகே மதுகுடிக்க பணம் தர மறுத்த பெயிண்டரை கத்தியால் குத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரூர்:
பேரூர் அருகே உள்ள சொக்கம்புதூர் ஜீவபாதை வீதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 35). பெயிண்டர். இவர் நேற்று முன்தினம் பேரூர்-வேடபட்டி இடையே உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் மதுவாங்கி குடித்துவிட்டு, ஆற்று விநாயகர் கோவில் வழியாக பேரூர் பஸ் நிறுத்தத்துக்கு சென்றார்.
அப்போது எதிரே வந்த 2 வாலிபர்கள் மாரிமுத்துவிடம் மதுக்குடிக்க பணம் கேட்டு மிரட்டினர். ஆனால் அவர் பணம் இல்லை என்று கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள் மாரிமுத்துவை கத்தியால் குத்தினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் மயங்கி கீழே விழுந்தார்.
இதையடுத்து, அந்த 2 வாலிபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் மாரிமுத்துவை மீட்டு சிகிச்சைக்காக, 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, மாரிமுத்துவின் மனைவி லட்சுமி கொடுத்த புகாரின் பேரில், பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், மாரிமுத்துவை கத்தியால் குத்தியது பேரூர் அருகே உள்ள மேட்டூரை சேர்ந்த ராஜேஷ் (25), செட்டிபாளையத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் (27) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.