செய்திகள்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மூதாட்டி உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 60 வயது மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரைக்கும் 9,875 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதில் 9,488 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 100 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சோமண்டார்குடி கிராமத்தை சேர்ந்த 60 வயது மூதாட்டி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த 4 நாட்களாக சிகிச்சையில் இருந்த அவர் நேற்று திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதன் மூலம் மாவட்டத்தில் இறப்பு விகிதம் 101 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே நேற்று 1,260 பேரின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வந்தது. இதில் 48 பேருக்கு தொற்று உறுதியானது. இதன் மூலம் மொத்தபாதிப்பு 9,923 ஆக உயர்ந்துள்ளது. தொற்று உறுதிசெய்யப்பட்ட அனைவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை உள்பட பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.