ஆன்மிகம்
பஞ்சவடி கோவில்

பஞ்சவடி கோவிலில் சிறப்பு திருமஞ்சனம் நாளை நடக்கிறது

Published On 2020-08-04 06:59 GMT   |   Update On 2020-08-04 06:59 GMT
அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமிபூஜை நாளை நடக்கிறது. இதனையொட்டி பஞ்சவடி கோவிலில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற உள்ளது.
திண்டிவனம்-புதுச்சேரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பஞ்சவடியில், ஜெயமங்கள வலம்புரி ஸ்ரீமகாகணபதி, ஜெயமங்கள சீதா சமேத பட்டாபிசேக ராமச்சந்திர மூர்த்தி லட்சுமணன், பரதன், சத்ருகனன், சுக்ரீவன், அங்கதன், ஜாம்பவான், விபீஷணன் மற்றும் அனுமன் ஆகியோரும், ஸ்ரீவாரி சீனிவாசர் மற்றும் பஞ்சமுக ஸ்ரீஜெயமாருதி சன்னதி நிர்மாணிக்கப்பட்டு பஞ்சமுக ஸ்ரீஜெயமாருதி சேவா டிரஸ்ட் மூலமாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப்பணிக்கான பூமி பூஜை நாளை (புதன்கிழமை) நடக்கிறது. இதனையொட்டியும், விரைவில் ராமர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டியும் பஞ்சவடி கோவிலில் எழுந்தருளியுள்ள ராமசந்திர சுவாமிக்கு நாளை காலை 8 மணிக்கு பால், மஞ்சள், சந்தனம், கான்பூரில் இருந்து வரவழைக்கப்பட்ட நறுமணமிக்க பன்னீர் மற்றும் இளநீர் போன்ற மங்கள திரவியங்களால் சிறப்பு திருமஞ்சனம் நடைபெறுகிறது.

இந்த சிறப்பு திருமஞ்சனத்தை கோவில் பட்டர் ரங்கராஜ பட்டாச்சாரியார், கூடுதல் பட்டர் வாசுதேவ பட்டாச்சாரியார் உள்ளிட்டோர் நடத்த உள்ளனர்.

பக்தர்கள் திரளாக கலந்து கொள்ள ஏதுவான சூழ்நிலை இல்லாததால் கோவிலில் திருமஞ்சனம் நடைபெறும் நேரத்தில் அவரவர் வீடுகளில் இருந்தபடியே பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எனவே கோவிலில் நடைபெறும் சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சியை நேரடியாக ஆன்லைனில் தரிசிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து விவரம் அறிய 94425 02446, 98412 99054 மற்றும் 96004 55395 எண்களை தொடர்பு கொள்ளவும். அஸ்வினி நட்சத்திரம் முதல் ரேவதி நட்சத்திரம் முடியவுள்ள நட்சத்திரங்களில் பிறந்த அனைத்து பக்தர்களுக்கும் சிறப்பு சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெறவுள்ளது.

மேலும் தினமும் அனைத்து சன்னதிகளிலும் உலக நன்மைக்காகவும், தற்போது நிலவும் கொரோனா கொடிய தொற்று நோயை தடுத்து நிறுத்தவும், சகஸ்ரநாம அர்ச்சனை நடந்து வருகிறது.

மேற்கண்ட தகவல்களை பஞ்சமுக ஸ்ரீஜெயமாருதி சேவா டிரஸ்டின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் எம்.கோதண்டராமன், கூடுதல் தலைவர் ஆர்.யுவராஜன், செயலாளர் எஸ்.நரசிம்மன், பொருளாளர் வி.கச்சபேஸ்வரன், டி.ஆர்.ராஜகோபாலன், கே.வெங்கட்ராமன், டாக்டர் எம்.பழனியப்பன், ஜி.செல்வம், வி.ஆர்.வெங்கடாசலம் மற்றும் நிர்வாக அதிகாரி கே.சந்திரமனோகரன் ஆகியோர் தெரிவித்தனர்.
Tags:    

Similar News