செய்திகள்
கோப்புப்படம்

நைஜீரியாவில் போலீஸ் நிலையம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - 5 போலீசார் பலி

Published On 2021-04-28 00:08 GMT   |   Update On 2021-04-28 00:08 GMT
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹரம் பயங்கரவாதிகள் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாரை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.
அபுஜா:

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹரம் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாரை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். இந்த நிலையில் நைஜீரியாவின் தெற்கு பகுதியில் இமோ மாகாணத்தின் தலைநகர் ஓவர்ரியில் உள்ள போலீஸ் நிலையம் மீது நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். மோட்டார் சைக்கிளில் வந்து இறங்கிய பயங்கரவாதிகள் போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.‌ பயங்கரவாதிகளின் இந்த வெறிச்செயலில் போலீசார் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் பல போலீசார் பலத்த காயமடைந்தனர்.

மேலும் இந்த தாக்குதலை தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் விசாரணைக்காக அடைத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் பலர் தப்பி ஓடினர். இந்த சம்பவத்துக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

முன்னதாக கடந்த 5-ந்தேதி ஓவர்ரியில் உள்ள சிறைச்சாலை மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதும், இதில் 1,800-க்கும் அதிகமான கைதிகள் தப்பி ஓடியதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News