ஆன்மிகம்
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில்

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா இன்று தொடங்குகிறது

Published On 2021-04-17 05:06 GMT   |   Update On 2021-04-17 05:06 GMT
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற சிவ ஆலயங்களில் தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலும் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி காலை 7.45 மணியில் இருந்து 8.15 மணிக்குள் சங்கரலிங்க சுவாமி சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்படுகிறது. தொடர்ந்து கோவில் உள்பிரகாரத்தில் சுவாமி, அம்பாள் வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சித்திரை திருவிழா கொடி ஏற்றத்திற்கு முதல் நாள் சங்கரன்கோவில் அருகில் உள்ள பெருங்கோட்டூர் கிராமத்தில் கோவில் யானை பிடிமண் எடுக்கும் அரிய நிகழ்ச்சி நடப்பது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக கோவில்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் பெருங்கோட்டூர் கிராமத்திற்கு சென்று கோவில் யானை பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சிக்கு பதிலாக கோவிலில் உள்ள நடராஜர் சன்னதி அருகில் யானை பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. யானை பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சியிலும் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக கோவில்கள் மூடப்பட்டிருந்ததால் சித்திரை திருவிழா நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News