செய்திகள்
கோப்புபடம்

முசிறி அருகே செங்கல் லோடு லாரி கவிழ்ந்து விபத்து - ஒருவர் பலி

Published On 2021-09-17 10:52 GMT   |   Update On 2021-09-17 10:52 GMT
முசிறி அருகே செங்கல் லோடு ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார்.

முசிறி:

முசிறி அய்யப்பாளையத்திலிருந்து, நாச்சம்பட்டிக்கு செங்கல் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்றது. லாரியை அய்யப்பாளையத்தை சேர்ந்த துரைராஜ் ஓட்டி சென்றார். இதில் செங்கல் இறக்கிவைப்பதற்கா அய்யப்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி, பெரம்பலூரை சேர்ந்த சுதாகர், ராசாத்தி, வீரமணி பட்டியை சேர்ந்த சந்திரா, நாச்சம்பட்டியை சேர்ந்த மலர்கொடி மற்றும் வேலகாநத்தத்தை சேர்ந்த லட்சுமணன் அமர்ந்து சென்றனர்.

லாரி நாச்சம்பட்டி வளைவு அருகே சென்ற போது எதிரே வந்த அடையாளம் தெரியாத ஆள் மீது மோதாமல் இருக்க, லாரியை வளைத்த போது, எதிர்பாராத விதமாக லாரி தலைகீழாக கவிழ்ந்து விபத்தானது. இதில் சுப்பிரமணி அதே இடத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். மற்றவர்கள் காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

இதனை பார்த்த அப்பகுதியினர் முசிறி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.போலீசார் விரைந்துவந்து உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவர்களை ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பிறகு இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் விபத்து நடந்த உடன் டிரைவர் துரைராஜ் சிறு காயங்களுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடிவருகின்றனர்.

Tags:    

Similar News